இரட்டை இலை கிடைக்குதோ இல்லையோ.. இதில் ஓபிஎஸ்ஸை வீழ்த்தி ஈபிஎஸ் "அபாரம்"!
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஓபிஎஸ் அணியைவிட அதிக அளவில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது ஈபிஎஸ் அணி.
டெல்லி: இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அணி 6,82,000 ஆவணங்களை தாக்கல் செய்து ஓபிஎஸ் அணியை பின்னுக்கு தள்ளியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணியாகப் பிரிந்தது. இரு அணிகளும் தாங்கள் தான் உண்மையான அதிமுகவினர் என்று கூறி இரட்டை இலை சின்னத்துக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்தை கேட்டு கோரிக்கை வைத்தபோது, தேர்தல் ஆணையம் அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மார்ச் 23ம் தேதி முடக்கி வைத்தது. மேலும், இரு அணிகளையும் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

கடைசி நாள்
இரட்டை சிலை சின்னத்தை முடக்கிய தலைமை தேர்தல் ஆணையம் ஜூன் 16-ம் தேதிக்குள் பிராமண பத்திரங்களை தாக்கல் செய்ய இரு அணிகளுக்கும் உத்தரவிட்டது. அதன்படி இன்று ஆவணங்கள் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

கூடுதல் ஆவணங்கள்
இறுதி நாளான இன்றும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் ஆவணங்களை தாக்கல் செய்தனர். இன்று எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து 2,83,173 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதே போன்று ஓபிஎஸ் அணியில் இருந்து 22 ஆயிரம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

ஓபிஎஸ்ஸை பின்னுக்கு தள்ளிய ஈபிஎஸ்
ஆக மொத்தம் இதுவரை ஒபிஎஸ் அணி சார்பில் 3.80 லட்சம் ஆவணங்களும், எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் 6,82,000 ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எடப்பாடி செய்த செலவு எவ்வளவு?
20 ரூபாய் முத்திரைத்தாளின் இந்த பிராமணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய்க்கு முத்திரைத்தாள்கள் வாங்கப்பட்டு ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

ஓபிஎஸ் செய்த செலவு?
ஓபிஎஸ் அணியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3.8 லட்சம் ஆவணங்களுக்காக76 லட்சம் ரூபாய்க்கு முத்திரைத் தாள்கள் வாங்கப்பட்டு ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த செலவு இல்லாமல் இவற்றை டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டதற்கான செலவுகள் தனி.

களத்தில் தீபா
ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி போன்றே ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் இரட்டை இலைக்கு உரிமை கோரி 50 ஆயிரம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். இறுதி நாளான இன்று அவர் கூடுதல் ஆவணங்களை எதையும் தாக்கல் செய்யவில்லை.












Click it and Unblock the Notifications