தொழில்நுட்ப கோளாறு.. ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசரமாக தரையிறக்கம் !
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சவுதி அரேபியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்திய விமானத்துக்கு சொந்தமான ஏஐ963 ரக விமானம் கொச்சியில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகருக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே திடீரென தொழில் நுட்பகோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் பின்னர் அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு தற்போது ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே மாற்று விமானம் மூலம் நாளை காலை 10.30 மணிக்கு பயணிகள் சவுதிக்கு அழைத்துசெல்லப்படுவார்கள் என ஏர்இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக மும்பை ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏஐ191 போயிங் ரக பயணிகள் விமானம் 300 பயணிகளுடன் மும்பையில் இருந்து வியாழக்கிழமை காலை 2.25 மணிக்கு நியூஜெர்சி மாகாணத்திலுள்ள நியூவர்க் நகருக்கு புறப்பட்டது.
விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது திடீரென தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கஜகஸ்தான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.