டோக்லாமில் திடீரென ராணுவத்தைக் குவிக்கும் சீனா.... மீண்டும் போர் பதற்றம்!
இந்தியா - சீனா எல்லைப் பகுதியான டோக்லாமில் சீனா மீண்டும் ராணுவத்தை குவிக்க ஆரம்பித்துள்ளது.
டெல்லி : இந்தியா - சீனா எல்லைப் பகுதியான டோக்லாமில் சீனா மீண்டும் ராணுவத்தை குவிக்க ஆரம்பித்துள்ளது. டோக்லாம் எல்லைப் பகுதியை சுத்தப்படுத்தி அதை விரிவுபடுத்தவும், சாலைகளை அகலப்படுத்தும் பணியிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளது. சீனாவில் இந்தச் செயல் எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது. அண்மையில் இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை எல்லையில் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்டது. அதன்பின் சில நாட்களாக இந்திய - சீனா எல்லைப்பகுதியான டோக்லாமில் அமைதி நிலவி வந்தது.
தற்போது மீண்டும் எல்லையில் ராணுவத்தை குவிக்க சீனா தொடங்கியுள்ளது. டோக்லாம் பகுதியில் தங்களது ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோரை இறக்கி இருக்கிறது சீன அரசு. இது அந்தப் பகுதியில் அதீத போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து வெறும் 12 கிமீ தூரத்திலேயே சீனா தனது ராணுவ முகாமை அமைத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் டோக்லாம் எல்லாப்பகுதியை சுத்தப்படுத்தி அதை விரிவுபடுத்தவும் தொடங்கியுள்ளது.
மேலும் இன்று காலைலயில் இருந்து அந்தப் பகுதியில் நீண்ட அகலமான சாலைகள் அமைக்கவும் தொடங்கியுள்ளது சீன ராணுவம். இந்தப் பணிகளுக்காக , நிறைய பணியாளர்களும், ராணுவ வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்திய விமானப்படை மூத்த அதிகாரி , பி எஸ் தானோவ் பேசுகையில் " சீனா டோக்லாம் எல்லையில் சாலைகள் அமைப்பது மட்டும் இல்லாமல் போர் பயிற்சியிலும் ஈடுபட தொடங்கியுள்ளது. இது மிகப்பெரிய அத்துமீறல். ஒருவேளை சீனா தாக்குதல் நடத்தினால் திருப்பி தாக்கவும் தயாராக இருக்கின்றோம்" என்றார்.