மோடி திறந்த அடல் பாலம்.. “அலர்ட்” ஆன குஜராத் அரசு! கட்டுப்பாடு விதித்த மாநகராட்சி
காந்திநகர்: குஜராத்தில் பழமையான மோர்பி தொங்கு பாலம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 134 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் மேம்பாலத்தில் ஒருமணி நேரத்தில் ஆட்கள் நிற்பதற்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள சபர்மதி ஆறு உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக இருக்கிறது. வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இதனை காண வருகை தருகின்றனர்.
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை குஜராத் மாநில அரசும், மத்திய அரசும் மேற்கொண்டு வருகின்றன.

அடல் பாலம்
அந்த வகையில் சபர்மதி ஆற்றில் எல்லிஸ் பாலம் மற்றும் சர்தார் பாலம் இடையே முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் "அடல்" என்ற பெயரில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

கட்டுப்பாடு
அழகிய வடிவமைப்பு கொண்ட இந்த பாலம் அகமதாபாத் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரே நேரத்தில் 12,000 நபர்களின் எடையை இந்த அடல் பாலம் தாங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முந்தினம் குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு 3,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மாநகராட்சி கட்டுப்பாடு விதித்துள்ளது.

பாலத்தின் நீளம்
300 மீட்டர் தூரத்தில் கட்டப்பட்டு இருக்கும் இந்த பாலம் சபர்மதி ஆற்றின் கிழக்கு மற்றும் மேற்கு கரை பகுதியை இணைக்கிறது. அதேபோல் மேற்கு கரையில் இருக்கும் மலர் பூங்கா மற்றும் மைதானம் இடையே இருக்கும் பிளாசாவை கிழக்கு கரையில் இருக்கும் கண்காட்சி மையத்துடன் இணைத்தது.

அழகிய வடிவமைப்பு
இந்த பாலத்தின் மேற்கூரை வடிவமைப்பே தனித்துவமாக அமைந்து இருந்தது. பல வண்ணங்களை கொண்டு அமைக்கப்பட்ட பாலத்தின் மேற்கூரை வண்ணமயமாக காட்சி தருகிறது. குஜராத்தின் பிரபலமான பட்டம்விடும் திருவிழாவை அடிப்படையாக கொண்டு பட்டத்தின் வடிவில் அதன் மேற்கூரைகள் வடிவமைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications