படான்: 2 சிறுமிகளும் கோடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்- பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட இரு சகோதரிகளும் உயிரிழப்பதற்கு முன்னதாக கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதாக அவர்களது பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது. முன்னதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் சிறுமிகளில் ஒருவர் பலாத்காரம் செய்யப் படவில்லை எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள கத்ரா கிராமத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி 14 மற்றும் 15 வயதுடைய உறவுக்கார தலித் சிறுமிகள் இருவர் மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். நள்ளிரவில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற அவர்களை ஒரு கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறப்பட்டது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை உண்டாக்கிய இந்த சம்பவத்திற்கு ஐநாவும் கண்டனம் தெரிவித்தது. இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். சரியாக நடவடிக்கை எடுக்காத இரு போலீஸ்காரர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுமிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய அம்மாநில டி.ஜி.பி. ஆனந்த் லால் பானர்ஜி, ‘சிறுமிகளில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டது உறுதி செய்யப்படவில்லை என்றும், சொத்துத் தகராறு காரணமாகக் கூட இக்கொலை நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
டி.ஜி.பி.யின் இந்தக் கருத்துக்கு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் கண்டனம் தெரிவித்தனர். உத்திரப்பிரதேச அரசு மீதான நம்பகத்தன்மை போய் விட்டதாகவும், வழக்கை திசை திருப்பும் நடவடிக்கைகளில் மாநில போலீசார் ஈடுபடுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், இக்கொலையின் பின்னணியில் சொத்துப் பிரச்சினை எதுவும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். உடனடியாக வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அப்போது தான் உண்மைகள் அனைத்தும் வெளிவரும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள சிறுமிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, அவர்கள் இருவரும் கோடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டது அம்பலமாகியுள்ளது.
இத்தகவலைக் கேள்விப்பட்ட மகளிர் அமைப்பினர் போலீஸ் இந்த வழக்கை திசை திருப்ப முயற்சிப்பதாகக் கூறி தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகள் அம்மாநில முதல்வரின் ஜாதியைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே போலீஸ் இவ்வாறு இந்த வழக்கை சொத்துப் பிரச்சினையால் கொலை என மாற்றி மக்களைக் குழப்ப நினைப்பதாக சிறுமிகளின் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.