மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வேண்டாம்...வாக்குச் சீட்டே வேண்டும் - கோரிக்கை விடுத்த 16 கட்சிகள்!
இனி நடக்கும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வேண்டாம். மீண்டும் வாக்குச் சீட்டு முறையையே கொண்டு வாருங்கள் என இந்த தேர்தல் ஆணையத்திடம் திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ்
டெல்லி: இந்தியாவில் இனி நடக்கும் தேர்தலில் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 16 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளன.
இந்தியா உலக அளவில் மிகப் பெரிய ஜனநாயக நாடு. அதிக மக்கள் தொகைகொண்ட நாட்டில் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மூலம் வாக்கப்பதிவு நடைபெற்றால், தேர்தலை எளிதில் நடத்த முடியும். ஓட்டு எண்ணிக்கைக்கு அதிக மனித வளமும் நேரமும் செலவாகாது உள்ளிட்ட காரணங்களால் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், தற்போது மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குபதிவில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சி 325 இடங்களைப் பிடித்து வரலாறு காணாத வெற்றியை அடைந்தது.
அதுமுதல், ராஜ்யசபாவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததால் தான் பாஜக இந்த வெற்றியைப் பெற்றது என குற்றம்சாட்டி அமளியில் ஈடுபட்டார்கள்.
அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல், அரசியல் விமர்சகர்கள், நடுநிலையாளர்கள் என பலரும் இதே குற்றச்சாட்டை கூறிவருகின்றனர்.
இந்த சூழ்நிலையில்தான், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் , பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 16 கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையரை சந்தித்து, மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே மாற வேண்டும். மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தையே பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.