பெங்களூருவில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் மீது 'போர் தொடுத்ததாக' வழக்கு: கர்நாடகா டிஜிபி
பெங்களூரு: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் மீது ஆசிய நாடுகளுக்கு எதிராக போர் தொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கர்நாடக டிஜிபி லால் ருக்கும் பச்சாவோ தெரிவித்தார்.
பெங்களூரை சேர்ந்த மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்பவர், டிவிட்டர் மூலமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக இங்கிலாந்தின் சேனல்4 செய்தி சேனல் செய்தி வெளியிட்டிருந்தது.

இதையடுத்து பெங்களூரு கங்கமனகுடி போலீஸ் சரகத்திற்கு உட்பட ஜாலஹள்ளி பகுதியிலுள்ள ஒரு அப்பார்ட்மென்டில் மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதுகுறித்து கர்நாடக டிஜிபி லால் ருக்கும் பச்சாவோ இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
24 வயதான மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ், மேற்குவங்க மாநிலத்தின் குருநானக் இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்திருந்தார். கல்லூரியிலேயே வேலைக்கான ஆஃபர் கிடைத்து பெங்களூரிலுள்ள உணவு பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் எக்சிகியூட்டிவாக பணிக்கு சேர்ந்தார். 2012 முதல் பெங்களூருவில் அவர் வேலை பார்த்து வந்தார். மேதி மஸ்ரூர் பிஸ்வாசின் ஆண்டு சம்பளம் ரூ.5.3 லட்சமாகும்.
மேதியின் தந்தை மேற்கு வங்க மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். மேதிக்கு இரு தங்கைகள் உள்ளனர். 60 ஜிபி இன்டெர்நெட் டேட்டா-பேக்கை பயன்படுத்தி இரவு நேரங்களில் டிவிட்டரே கதியாக இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். பல்வேறு டிவிட்டர் தளங்களில் ஐஎஸ்ஐஎஸ் குறித்து, உருது மொழியில் வரும் டிவிட்டுகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதை ஆதரவாளர்களுக்கு பரப்பியுள்ளார். இவரை ஃபாலோ செய்யும் பலரும் ஐரோப்பியர்கள். எனவேதான் இங்கிலாந்து சேனல் இதை கண்டுபிடித்துள்ளது.
கைதான மேதி மஸ்ரூர் பிஸ்வாசுக்கு எதிராக, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125-ன்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்படவில்லை. எனவே அந்த இயக்கத்தோடு தொடர்புள்ள யாரையும் கைது செய்ய கூடாது என்று கூற முடியாது. சட்டப்பிரிவு 125ன்படி ஆசிய நாடுகளுக்கு எதிராக போர் தொடுத்த குற்றச்சாட்டின்கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இணையதளத்தை பயன்படுத்தியுள்ளதால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66வது பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின் பிரிவு 18 மற்றும் 39ன்கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரது வீட்டில் இருந்து 2 செல்போன்கள், லேப்டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு தீவிரவாத அமைப்புகளுடன் இவருக்கு தொடர்பில்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் மீதான ஆர்வத்தால் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வந்துள்ளார். இவ்வாறு டிஜிபி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications