வசுந்தரா, சுஷ்மா, செளகான் விலக மாட்டார்கள்.. நாடாளுமன்றத்தில் "புயலை"ச் சந்திக்க பாஜக தயார்
டெல்லி: ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, ம.பி முதல்வர் சிவராஜ் சிங் செளகான், மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் தாங்கள் சந்தித்து வரும் சர்ச்சைகள் தொடர்பாக பதவி விலகுவதில்லை என்றும் இதுதொடர்பாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்பினால் அதை முழு வீச்சில் சந்திப்பது என்றும் பாஜக முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று டெல்லியில் பாஜக தலைவர் அமீத் ஷா தலைமையில் நடந்த உயர் மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், ஸ்மிருதி இராணி, ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள், வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராஜினாமா கிடையாது
இந்த கூட்டத்தில் சர்ச்சையில் சிக்கிய சுஷ்மா, சிந்தியா, செளகான் ஆகியோர் பதவி விலகுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

விமர்சித்தால் பதிலடி தருவோம்
இவர்கள் குறித்த பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பினால் அதற்கு பாஜக தரப்பில் சரியான பதிலடி தருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கட்சியும், ஆட்சியும் ஒருங்கிணைந்து
இந்த விவகாரத்தில் பாஜக ஆட்சியுடன் இணைந்து கட்சியும் கை கோர்த்து ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாம்.

காங்கிரஸின் மிரட்டல்
வசுந்தரா ராஜே சிந்தியா, செளகான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது. இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தை முடக்குவோம் என அது எச்சரித்துள்ளது.

லலித் மோடியால் சிந்தியாவுக்கு சிக்கல்
முன்னாள் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடியுடன் வசுந்தரா வைத்துள்ள தொடர்புகளால் அவரைக் குறி வைத்துள்ளது காங்கிரஸ். சுஷ்மா சுவராஜுக்கும் லலித் மோடி பிரச்சினையே தலையை உருட்டி வருகிறது. செளகான், வியாபம் ஊழல் தொடர்பாக சிக்கியுள்ளார்.

இனி தற்காப்பு கிடையாது, அதிரடியே
கடந்த சில மாதங்களாக இவை உள்பட பல்வேறு பிரச்சினைகளில் தற்காப்பாக செயல்பட்ட நிலையை மாற்றி அதிரடியாக செயல்படவும் பாஜக தீர்மானித்துள்ளதாம்.

எம்.ஜே.அக்பர்
நேற்று நடந்த கூட்டத்தில் மீடியா பிரபலங்களான எம்.ஜே. அக்பர், ஸ்ரீகாந்த் சர்மா, சம்பித் பத்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் சில பிரச்சினைகள்
இவை தவிர ஸ்மிருதி இராணியின் படிப்பு சான்றிதழ் தொடர்பான சர்ச்சை, சட்டிஸ்கர் முதல்வர் ரமன் சிங் ஆட்சியில் நடந்த அரிசி ஊழல் உள்ளிட்டவற்றையும் கையில் எடுக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது.

வீரபத்ர சிங் விவகாரத்தை பாஜக கிளப்பலாம்
இந்த நிலையில் காங்கிரஸுக்கு நெருக்கடி தர வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக சிக்கலில் உள்ள ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் விவகாரத்தை பாஜக கையில் எடுக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications