அத்வானி 'எஃபெக்ட்': வெளியே வர மறுத்த யஷ்வந்தா சின்ஹா ஜாமீனில் வந்தார்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில மின்வாரியத் துறை அதிகாரியை தாக்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதியில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்சனையை கண்டித்து கடந்த 2ம் தேதி போராட்டம் நடத்தினார். அப்போது அம்மாநில மின்வாரியத் துறை உயர் அதிகாரி தாக்கப்பட்டதையடுத்து யஷ்வந்த் சின்ஹா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 53 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமீன் தொகையை செலுத்த மறுத்ததால் யஷ்வந்த் சின்ஹா ஹசாரிபாக் சிறையில் அடைக்கப்பட்டார்.
மின்வெட்டு பிரச்சனை தீரும் வரை சிறையில் இருந்து வெளியே வர மாட்டேன் என்று சின்ஹா தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி சின்ஹாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார். சின்ஹா சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை அத்வானி தெரிவித்தார்.
இதையடுத்து யஷ்வந்த் சின்ஹா ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். அவருக்கு ஜார்க்கண்ட் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் இன்று மாலை சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.