அமித் ஷா கூட்டத்துக்கு போவியா... பாஜக தொண்டருக்கு சிகரெட்டால் சூடு வைத்த மமதா கட்சியினர்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் அமித் ஷாவின் கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக அக்கட்சியைச் சேர்ந்தவரை திரிணாமூல் காங்கிரஸார் அடித்து சிகரெட்டால் சூடு வைத்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஹூக்ளி மாவட்டம் பன்ஸ்பெரியா நகரைச் சேர்ந்த பாஜக தொண்டர் பிஷ்ணு சவுத்ரியின் வீட்டுக்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கடந்த புதன்கிழமை சென்றுள்ளனர்.
அமித் ஷா கூட்டத்தில் ஏன் கலந்து கொண்டீர்கள் என்று கேட்ட திரிணாமூல் காங்கிரஸார் சவுத்ரியை தங்கள் கட்சியில் சேருமாறு வலியுறுத்தினர். அவர் மறுக்கவே அவரை அடித்து அவரது மார்பில் திரிணாமூல் காங்கிரஸின் ஆங்கில சுருக்கமான டி.எம்.சி. என்ற வடிவில் சிகரெட்டால் சூடு வைத்தனர்.
இது குறித்து சவுத்ரி கூறுகையில்,
திரிணாமூல் குண்டர்கள் நான் ஏன் அமித் ஷா கூட்டத்தில் கலந்து கொண்டேன் என்று கேட்டு என் உடலில் சிகரெட்டால் சூடு வைத்தனர். என்னை அவர்கள் கட்சியில் சேருமாறு வற்புறுத்தினார். நான் அந்த கட்சியில் சேர மறுத்துவிட்டேன். உடனே அவர்கள் என்னை தாக்கி என் மார்பில் டி.எம்.சி. என்ற வடிவில் சிகரெட்டால் சூடு வைத்தனர் என்றார்.
இந்த சம்பவத்திற்கும் திரிணாமூல் காங்கிரஸாருக்கும் தொடர்பு இல்லை என்றும், இது பாஜகவின் நாடகம் என்றும் மமதா கட்சியின் ஹூக்ளி மாவட்ட தலைவர் தாபன் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சவுத்ரி தாக்கப்பட்டது குறித்து ஹுக்ளி மாவட்ட பாஜக தலைவர் கிருஷ்ணா பட்டாசார்ஜி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் போலீசிலும் புகார் அளிக்க உள்ளார். ஏற்கனவே இந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட சவுத்ரி போலீசில் புகார் அளித்துள்ளார்.