கருப்பு பண விவகாரம்: ஹெச்.எஸ்.பி.சி.க்கு நோட்டீஸ் அனுப்பியது வெறும் துவக்கமே!
டெல்லி: கருப்பு பண விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் ஹெச்.எஸ்.பி.சி.க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது வெறும் துவக்கம் தான் என்று கூறப்படுகிறது.
தங்களுக்கு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதை ஹெச்.எஸ்.பி.சி. உறுதிபடுத்தியுள்ளது. வரி ஏய்ப்பு செய்ய பலர் ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் பணத்தை பதுக்க அனுமதித்த குற்றத்திற்காக அந்த வங்கிக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படலாம்.
ஹெச்.எஸ்.பி.சி.யிடம் இருந்து நோட்டீஸுக்கான பதில் கிடைத்தவுடன் அந்த வங்கியில் தங்களின் கருப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கு எதிராக வருமான வரித்துறையினர் குறைந்தபட்சம் 100 புகார்கள் பதிவு செய்யவுள்ளனர். இதன் மூலம் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தில் கூடுதலாக ரூ.6 ஆயிரத்து 300 கோடியை இந்திய அரசால் மீட்க முடியும்.
தற்போது ஹெச்.எஸ்.பி.சி. வங்கி கணக்குகள் தொடர்பாக 240 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்தியர்களுக்கு சொந்தமாக சுமார் 628 கணக்குகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு இதுவரை ரூ.3 ஆயிரத்து 700 கோடி கருப்பு பணத்தை மீட்டுள்ளது. ஹெச்.எஸ்.பி.சி.யில் உள்ள 628 கருப்பு பண கணக்குகளில் 200 வெளிநாடு வாழ் இந்தியர்களின் கணக்குகள், அதுவும் அவை யாருடையது என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் சில கணக்குளில் தற்போது பணம் இல்லை. அதாவது பதுக்கி வைத்திருந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது.