தமிழக --கேரளா எல்லை... புளியரை செக் போஸ்ட்டில் சிசிடிவி கேமரா பொருத்தம்
செங்கோட்டை: தமிழக -கேரளா எல்லையான செங்கோட்டை புளியரை செக்போஸ்ட்டில் கேமரா மூலம் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வழியாக தினமும் கேரளா நோக்கியும்,கேரளாவிலிருந்து தமிழகம் நோக்கியும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள், பேருந்துகள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் 24 மணி நேரமும் சென்று வருகின்றன.
எப்போதும் போக்குவரத்து நடந்துவரும் இந்த சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் எறி சாராயம், அரிசி உள்ளிட்ட பொருட்களை ஏற்றி சென்று கேரள மாநிலத்தில் பிடிபடுவது வழக்கமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.
இந்த கடத்தலை தடுக்கும் பொருட்டு செங்கோட்டை புளியரை, செங்கோட்டை மேக்கரை ஆகிய இரண்டு சோதனை சாவடிகளிலும் மாவட்ட காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்தது. அதன்படி செங்கோட்டை புளியரை சோதனை சாவடியில் 4கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அதன் செயல் பாட்டை தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அரவிந்தன் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி, எரி சாராயம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களை ஒருகேமரா ஓட்டுனரையும், இன்னொரு கேமரா வாகனத்தின் பதிவு எண்ணையும் பதிவு செய்யும்.
அதே போல் கேரளாவிலிருந்து தமிழகம் வரும் வாகனங்களை ஒருகேமரா ஓட்டுனரையும்,இன்னொரு கேமரா வாகனத்தின் பதிவு எண்ணையும் பதிவு செய்யும் வண்ணம் 4 கேமரா அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் கடத்தல் சம்பவங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த கண்காணிப்பு கேமராக்களை புளியரை காவல் நிலையத்தில் இருந்தும் கண்காணிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.