காவிரி மேலாண்மை வாரியம்.. இரண்டே நாளில் மத்திய அரசு அடித்த அந்தர் பல்டி.. பின்னணி என்ன தெரியுமா?
டெல்லி: வெண்ணை திரண்டு வரும்போது பானையை உடைத்த கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது அதை காவிரி விவகாரத்தில் கண்முன் காட்டிவிட்டது மத்திய அரசு.
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் விட கர்நாடக அரசு முரண்டுபிடித்து வந்தது. இதனால் சுப்ரீம்கோர்ட் மூலமாக, தமிழக அரசு தண்ணீர் பெற போராடி வந்தது.
அடிக்கடி சுப்ரீம் கோர்ட்டை தமிழகம்-கர்நாடகா நாடுவதால், அதிருப்தியடைந்த சுப்ரீம்கோர்ட், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
3 நாளில் ஓ.கே என்றார்
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கர்நாடகா தனது உத்தரவை ஏற்று தண்ணீர் திறக்காமல் இருப்பதை பார்த்து கோபமடைந்த சுப்ரீம் கோர்ட் 3 நாட்களுக்குள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியுமா என மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோதகியிடம் கேட்டது. இதற்கு முகுல் ரோதகியும், முடியும் என கூறிவிட்டார்.
அரசியல் நகர்வுகள்
அட்டார்னி ஜெனரல் இவ்வாறு கூறியது தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உடனடியாக, அரசியல் நகர்வுகளை ஆரம்பித்தனர் கர்நாடக அரசியல்வாதிகள். மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்தகவுடா உள்ளிட்டோர் மத்திய நீர்வள அமைச்சர் உமா பாரதியை சந்தித்து முறையிட்டனர்.
மத்திய அமைச்சர்கள் முகாம்
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது கர்நாடகாவிற்கு ஆதரவான உமா பாரதி மட்டுமின்றி கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர். அவர்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் கர்நாடகாவில் பாஜகவின் எதிர்காலமே பாழாகிவிடும் என மோடியிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு இல்லாத நிலையில், ஆட்சிக்கு வர நிச்சய வாய்ப்பு உள்ள கர்நாடகா சார்பாகவே நாம் முடிவெடுக்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டுள்ளனர்.
மத்திய அரசுக்கு நெருக்கடி
இதனிடையே, கடந்த சனிக்கிழமை பெங்களூரில் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார். இதுவும், மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இது ஒருபக்கமெனில், தமிழகம் தரப்பில் மத்திய அரசுக்கு எந்த ஒரு அழுத்தமும் போகவில்லை. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால், அரசு தரப்பிலிருந்து நெருக்கடி தர முடியவில்லை. தமிழக எதிர்க்கட்சிகள் சார்பிலும் மத்திய அரசிடம் நெருக்கடி கொடுக்க உரிய நபர்கள் இல்லை என்றாகிவிட்டது.
பல்டியடித்த அரசு
இந்நிலையில்தான், இன்று சுப்ரீம்கோர்ட்டில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோதகி, ஒரு மனுவை தாக்கல் செய்தார். கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதிகள், தீபக் மிஸ்ரா மற்றும் உதய் லலித் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என அதில் கூறப்பட்டுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா 3 பெஞ்ச் அமர்வில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், 2 நீதிபதிகள் பெஞ்ச் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது என கூறப்பட்டுள்ளது.
திடீர் பல்டி
கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க கோரிய வழக்கில், இது சட்டசபை விவகாரம் என சுப்ரீம்கோர்ட் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டியுள்ள முகுல் ரோதகி, காவிரி வழக்கிலும் அதையே பின்பற்ற வேண்டும் என கோரியுள்ளார். இதன்மூலம், 3 நாளில் மேலாண்மை வாரியம் அமைக்க ரெடி என கூறிய 2வது நாளிலேயே மத்திய அரசு பல்டியடித்துள்ளது அம்பலமாகியுள்ளது.
கர்நாடக குரல் எதிரொலி
மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒத்துக்கொள்ளக்கூடாது, 2 நீதிபதிகள் இவ்வாறு அறிவிப்பது செல்லாது என கூற வேண்டும் என்பது கர்நாடக அரசியல் கட்சிகள், மீடியாக்களின் ஒருமித்த குரல். அதை அப்படியே மத்திய அரசு இன்று எதிரொலித்துள்ளது. வெள்ளிக்கிழமை கர்நாடக மக்களிடம் வில்லனாக இருந்த மத்திய அரசு இன்று ஹீரோவாகியுள்ளது. ஆனால் வெள்ளிக்கிழமை தமிழக மக்களிடம் ஹீரோவாக இருந்த மத்திய அரசு இன்று ஹீரோவாகிவிட்டது. மொத்தத்தில் அரசியல் காய் நகர்த்தலில் தமிழகம் தோற்றுவிட்டது என்பதே கசப்பான உண்மை.