வருடத்தின் 365 நாட்களையுமே காங். ‘ஏப்ரல் ஃபூல்’ தினமாகக் கொண்டாடுகிறது: மோடி
பரேலி: வருடத்தின் அனைத்து நாட்களையுமே ஏப்ரல் முதல் தினமாக, அதாவது ‘ஏப்ரல் ஃபூல்' தினமாகக் காங்கிரஸ் கொண்டாடுவதாக பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான மோடி தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள லோக்சபா தேர்தலையொட்டி நாடு முழுவதும் பாஜகவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள நரேந்திர மோடி. அதன்படி, பரேலியில் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது, காங்கிரஸ் கட்சி வருடத்தின் 365 நாட்களும் 'ஏப்ரல் ஃபூல்' தினம் கொண்டாடுகிறது என தெரிவித்தார் மோடி. மேலும், பரேலி கூட்டத்தில் அவர் பேசியதாவது :-
பாரதீய ஜனதாவில் இருந்து கூட்டணி கட்சிகள் விலகி சென்றன. ஆனால் தமிழகம் மற்றும் காஷ்மீரில் இருந்து கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. காங்கிரஸ் மற்றும் மூன்றாவது அணியில் உள்ளவர்கள் நிலையில்லா அரசு மத்தியில் அமைவதை விரும்புகின்றனர். இது அவர்களுடைய சதியே' எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், காங்கிரஸ் கட்சி 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், தேர்தல் அறிக்கையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறியது. ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது விவசாயிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவியது.
காங்கிரஸ் கட்சி தேர்தலின் போது ஓட்டுக்காக ஏழ்மை குறித்து பேசி வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நாட்டில் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் புறக்கணிக்கப்பட்டனர். விவசாயிகள் தற்கொலைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்' என இவ்வாறு மோடி தெரிவித்தார்.