அதெப்படி பஞ்சாயத்து முடியும்? ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றத்தில் காங். எம்.எல்.ஏக்கள் கடும் அதிருப்தி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலரும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதால் சலசலப்பு தொடருகிறது.
ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் தலைமையில் 18 எம்.எல்.ஏக்கள் கடந்த ஆண்டு முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சச்சின் பைலட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு
இன்னொரு பக்கம் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இல்லாமலேயே தம்மால் ஆட்சி நடத்த முடியும் என முனைப்பு காட்டி வந்தார் அசோக் கெலாட். இதனால் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாஜகவில் இணைவார்களோ என்ற கேள்வியும் எழுந்தது. ஆனாலும் சச்சின் பைலட் உள்ளிட்டோர் பொறுமை காத்து வந்தனர்.
கெலாட் அமைச்சரவை மாற்றம்
இந்நிலையில் இன்று அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவை முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த சச்சின் பைல்ட், தலித், பழங்குடிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது. காங்கிரஸில் கோஷ்டி பூசல் என்ற பிரச்சனைக்கே இடம் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்படுவோம் என கூறியிருந்தார்.
காங். எம்.எல்.ஏக்கள் அதிருப்தி
அதேநேரத்தில் அமைச்சரவையில் இடம் கிடைக்காத எம்.எல்.ஏக்கள் திடீரென முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜோஹரி லால் மீனா கூறுகையில், ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த மிக மோசமான ஊழல் எம்.எல்.ஏ. அமைச்சராக்கப்பட்டுள்ளார். ஆல்வார் மாவட்ட மக்களுக்கு இன்று கறுப்பு தினம் என்றார். அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள திகாராம் ஜூலியைத்தான் ஜோஹரி லால் மீனா எம்.எல்.ஏ. மறைமுகமாக சாடியிருக்கிறார்.
பிரியங்கா வாக்குறுதி என்னாச்சு?
மற்றொரு எம்.எல்.ஏ. ஷாஃபியா ஜூபைர் கூறுகையில், அமைச்சரவை மாற்றத்தில் அதிருப்தி உண்டு. உ.பி. சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி கூறுகிறார். ஆனால் ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றத்தில் பெண்களுக்கு வெறும் 10% இடஒதுக்கீடுதான் வழங்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரும் ஏமாற்றத்தை தருகிறது. இன்றைய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி செல்வதா? இல்லையா? என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.
பாஜக விளாசல்
இதனிடையே குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் வகையில் பாஜகவும் ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமித் மாள்வியா, உ.பியி. 4-வது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறது. உ.பி.யில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு வழங்குவோம் என்கிறது காங்கிரஸ். ஆனால் ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றத்தில் 3 பெண்களுக்குதான் வாய்ப்பு கொடுத்திருக்கிறது. அதாவது வெறும் 20% கூட பெண்களுக்கு அமைச்சரவை மாற்றத்தில் காங்கிரஸ் வாய்ப்பு தரவில்லை. காங்கிரஸின் இரட்டை வேடத்தையே இது வெளிப்ப்டுத்துகிறது என்றார்.