ஏழைகளுக்கான சமையல் கேஸ் மானியம் ரத்து செய்யப்படாது.. அடித்து சொல்லும் மத்திய அமைச்சர்!
ஏழைகளுக்கான சமையல் கேஸ் மானியம் ரத்து செய்யப்படாது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
அகர்தலா: ஏழைகளுக்கான சமையல் கேஸ் மானியம் ரத்து செய்யப்படாது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியாக தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயுக்கான மானியம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுவதும் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதற்காக, மாதந்தோறும் 4 ரூபாய் என்ற அளவில் மானிய விலை சிலிண்டர்களுக்கான விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், திரிபுரா மாநிலம் அகர்தலாவில், ஏழைகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்கி வைத்தார்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் 20 குடும்பத்தினருக்கு இலவச எரிவாயு இணைப்புகளையும் வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏழைகளுக்கு சமையல் கேஸ்க்கான மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும் ஏழைகளுக்கான சமையல் கேஸ் மானியம் ரத்து செய்யப்படாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள சமையல் கேஸ் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், வங்கதேசத்தில் இருந்து குழாய் மூலம் எரிவாயு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தர்மேந்திர பிரதான் கூறினார்.