எடப்பாடியும் பன்னீரும் ஒன்னு.. அப்படின்னு நினைச்சா உங்க வாயிலதான் மண்ணு.. தினகரனுக்கு கொட்டு!
டெல்லி: பிரதமர் மோடிக்கு நெருக்கமான நட்பு வளையத்தில் உள்ள அதிகாரிகளை வளைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் கார்டனில் உள்ளவர்கள். ஆனால், கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாகத்தான் எடப்பாடி இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். பன்னீர் பாணியில் அவரை அசைத்துவிட முடியும் என எதிர்பார்க்க வேண்டாம் என உணர்த்தியுள்ளனராம் டெல்லி லாபியில் கோலோச்சுபவர்கள்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகத்தில் இருந்து பா.ஜ.கவுக்கு வர வேண்டிய வாக்குகள் அனைத்தும் சரியாக வந்து சேர்ந்துவிட்டன. பா.ஜ.கவுக்கு செக் வைப்பதற்கு இந்தத் தேர்தலை ஒரு கருவியாக வைத்திருந்தார் தினகரன்.
ஆனால், பா.ஜ.கவின் பிடிவாதத்தைப் பார்த்தவர், தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக நாம் வாக்களித்தால், நமக்கு எதிராக வழக்கு அஸ்திரத்தை வேகப்படுத்துவார்கள். இந்தக் கோபத்தில் இருந்து மோடியை வெளியே கொண்டு வருவது கடினம். எனவே, பா.ஜ.க வேட்பாளருக்கு வாக்கு அளியுங்கள்' என உறுதியாகக் கூறிவிட்டார். அதனால்தான், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் ராம்நாத் கோவிந்தை ஆதரித்தார்கள்.

தாஜா செய்யும் முயற்சியில் தினகரன்
தேர்தலுக்கு முன்னரே பா.ஜ.கவுக்கு வேண்டியவர்களிடம், இதை உறுதிப்படுத்திவிட்டார் தினகரன். தேர்தல் முடிந்த நிலையில், தங்களுக்கு சாதகமாக சில விஷயங்களைச் செய்யுமாறு டெல்லி லாபியில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர் தினகரன் தரப்பினர்.

எதார்த்தத்தைப் புரிஞ்சுக்கங்க ப்ளீஸ்
அவர்களிடம் பேசிய பா.ஜ.க முக்கிய பிரமுகர் ஒருவர், நீங்கள் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினராக இருந்து, இந்தப் பதவிக்கு வந்திருக்கிறார் எடப்பாடி. பன்னீரைப் போல, ஆட்சியில் திடீரென உயர் பதவியைப் பிடித்தவர் அல்ல. அரசியமைப்புச் சட்டப்படியும், தன்னுடைய பதவியின் பலத்தை அவர் உணர்ந்திருக்கிறார். இந்த அரசுக்கு மாற்று இல்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.

எம்எல்ஏக்கள் இருக்காங்களா?
நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வர 24 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. இந்த எம்.எல்.ஏக்கள் அரசின் மீதான எதிர்ப்பைக் காட்டுவதற்கு கையெழுத்து போடுவார்களா என்றும் தெரியாது. நீங்கள் பன்னீருக்கு ஆதரவான செய்திகளை இருட்டடிப்பு செய்வதில் நியாயம் இருக்கிறது. எடப்பாடி அரசு குறித்த செய்திகளையும் வெளியிடாமல் இருப்பது தவறானது. மக்கள் மத்தியில் வேறு மாதிரியான தோற்றத்தைக் காட்டிவிடும்.

எடப்பாடியின் முனைப்பு
இதையெல்லாம் உணர்ந்துதான், தன்னை மிகப் பெரிய தலைவராகக் காட்டிக் கொள்ளும் வேலைகளில் எடப்பாடி முனைப்பு காட்டுகிறார். அவரது முயற்சிக்கு டெல்லியின் ஆதரவு இருக்கிறது. எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு சில காலம் அமைதியாக இருங்கள். உங்களுக்கென்று நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளுங்கள்' என அட்வைஸ் செய்திருக்கிறார்.

ஏமாற்றத்தில் தினகரன்
மிகுந்த நம்பிக்கையோடு டெல்லி ஆதரவை எதிர்பார்த்த தினகரன் ஏமாந்து போய்விட்டார். எடப்பாடி பழனிசாமியை வழிக்குக் கொண்டு வருவது குறித்து, தீவிர ஆலோசனையில் இருக்கிறார் என விவரித்தார் அ.தி.மு.கவின் முக்கியப் புள்ளி ஒருவர்.












Click it and Unblock the Notifications