கிடுக்குப்பிடி போட்ட வருமானவரித்துறை.. 16 நாட்களுக்கு பின் நகைக் கடைகளை திறந்த உரிமையாளர்
மத்திய அரசைக் கண்டித்து 16 நாட்களாக மூடப்பட்டிருந்த தங்க நகைக் கடைகள் நேற்று திறக்கப்பட்டுள்ளன.
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு தங்க நகைகள் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் வருமானவரித் துறையினர் நகைக் கடை உரிமையாளர்களுக்கு கொடுத்த கடும் நெருக்கடியை கண்டித்து 16 நாட்களாக நகைக் கடைகள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அனைத்து தங்க நகைக் கடைகளும் நேற்று திறக்கப்பட்டன.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, செல்லாது என்ற அறிவிக்கப்பட்ட பழைய நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு தங்க நகைகளை ரசீது இல்லாமல் விற்றதாக நகைக் கடை உரிமையாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, தாரிபா கலான், சாந்தினி சவுக், கரோல் பாக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரபல நகைக்கடைகளில் வருமானவரித் துறையினர் கடந்த 10ம் தேதி சோதனை நடத்தினார்கள். மேலும், நகைக் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. பின்னர், ரசீது இல்லாமல் விற்கப்பட்ட நகைகள் குறித்த ஆவணங்களை கைப்பற்றி வருமானவரித் துறையினர் ஆய்வு செய்தனர்.
வருமானவரித் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு நகைக் கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 16 நாட்களாக கடைகளை அடைத்து போராட்டத்தை நடத்தினார்கள். இந்நிலையில், நேற்று நகைக் கடை உரிமையாளர்கள் தங்களது எதிர்ப்பை முடித்துக் கொண்டு கடையைத் திறந்து தங்க நகை விற்பனை செய்து வருகின்றனர்.
தங்கத்தின் விலை பொருத்தவரை, பத்து கிராம் எடையிலான சுத்தமான தங்கத்தின் விலை 1,750 சரிந்து 29,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 8 கிராம் எடை கொண்ட ஒரு சவரனின் விலை 200 குறைந்து 24,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி விலையும் வீழ்ச்சியையே சந்தித்து வருகிறது. நேற்று 1 கிலோ வெள்ளியின் விலை 3,100 ரூபாய் குறைந்து 41,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 100 எண்ணிக்கையிலான வெள்ளி நாணயங்களின் விலையும் 3,000 குறைந்தது. இதன் வாங்கும் விலை 74,000 ஆகவும், விற்கும் விலை 75,000 ஆகவும் நேற்று இருந்தது.