கடன் இருக்கத் தான் செய்கிறது ஆனாலும் இனி ஈராக் பக்கமே போக மாட்டோம்: நர்ஸுகள்
கொச்சி: கடன் பிரச்சனை இருக்கின்றபோதிலும் இனி ஈராக்கிற்கு திரும்பிச் செல்லப் போவது இல்லை என்று அங்கிருந்து நாடு திரும்பிய நர்ஸுகள் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் சிக்கித் தவித்த 46 நர்ஸுகள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியோடு சனிக்கிழமை நாடு திரும்பினர். அவர்களை வரவேற்க அவர்களின் குடும்பத்தார், உறவினர்கள் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள விமான நிலையத்திற்கு வந்தனர்.
நர்ஸுகளின் குடும்பத்தார் அவர்களை பார்க்கும் வரையில் கவலையுடன் நின்று கொண்டிருந்தனர்.
கடன்
நான் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்பவன். நான் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்தில் பண பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து எனது நிலம் மற்றும் வீட்டை லீசுக்கு விட்டு ரூ.2 லட்சம் செலவு செய்து என் மகள் ரேணுவை கடந்த ஆண்டு ஈராக்கிற்கு அனுப்பி வைத்தேன். தற்போது கடன் இருந்தாலும் பரவாயில்லை என் மகள் பத்திரமாக வந்தாலே போதும் என்று பாலகிருஷ்ணன் என்பவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
குடும்ப கடன்
என் குடும்பம் கடன் தொல்லையால் தவித்தது. கடனை அடைக்கத் தான் நான் ஈராக் சென்றேன் என்று கேரளாவைச் சேர்ந்த சுனிதா கோபி என்ற நர்ஸ் தெரிவித்தார்.
பணம்
ஈராக்கில் நல்ல சம்பளம் கிடைத்ததால் அங்கு சென்று பணியாற்றியதாக கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த நர்ஸ் சுமி ஜோஸ் தெரிவித்தார்.
சம்பளம்
என்ன காரணம் என்றே தெரியவில்லை. கடந்த 3 மாதங்களாக எங்களுக்கு சம்பளமே கொடுக்கவில்லை. மேலும் அண்மையில் வந்த 15 நர்ஸுகளுக்கு இன்னும் முதல் மாத சம்பளமே கிடைக்கவில்லை என்றார் கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் ரம்யா ஜோஸ்.
ஈராக்
என்ன தான் கடன் பிரச்சனை இருந்தாலும் சரி இனி ஈராக்கிற்கு திரும்பிச் செல்லக் கூடாது என்பதில் நர்ஸுகள் உறுதியாக உள்ளனர்.