தனிக்கட்சிதான், ஆனா இல்லை.. உள்ளாட்சி தேர்தலுக்கு தினகரன் தடாலடி வியூகம்.. டெல்லி ஹைகோர்ட்டில் மனு
Recommended Video
டெல்லி: 'அதிமுக அம்மா' என்ற பெயரை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டிடிவி தினகரன் சார்பில் டெல்லி ஹைகோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் அதிமுகவுக்கு உரிமை கொண்டாடியபோது, அதிமுக அம்மா என்ற பெயர் சசிகலா-எடப்பாடி தரப்புக்கும், அதிமுக புரட்சி தலைவி அம்மா என்ற பெயர் பன்னீர்செல்வம் தரப்புக்கும் ஒதுக்கப்பட்டு, அதிமுக என்ற பெயரை எந்த தரப்பும் பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
எடப்பாடி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் இணைந்ததும், அவர்கள் கோரிக்கையை ஏற்று, அதிமுக பெயரை பயன்படுத்த, அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான இந்த அணியினருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தது.
ஒரே சின்னம் தேவை
இதையடுத்து தினகரன் சுயேச்சையாக ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். இப்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சி என்ற ஒன்று இல்லாவிட்டால் தமிழகம் முழுக்க ஒரே சின்னத்தில் போட்டியிட முடியாது என்ற சூழல் உள்ளதால் தினகரன் கலக்கம் அடைந்துள்ளார். தனிக்கட்சி துவங்க அவர் திட்டமிட்டாலும், ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் போன்றோர் அதிமுக பேனரில்தான் நாம் இயங்க வேண்டும் என கறார் காட்டி வருவதாக தெரிகிறது.
புது திட்டம்
இதையடுத்து புது திட்டம் வகுத்துள்ளார் தினகரன். அதன்படி, இன்று, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் இடைக்கால மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் அதிமுக அம்மா பெயரை பயன்படுத்த அனுமதிக்க கோரிக்கைவிடுத்துள்ளார்.
நாளை விசாரணை
தினகரன் தாக்கல் செய்துள்ள இடைக்கால மனு நாளை விசாரணைக்கு வருகிறது. ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள தினகரன் தங்களது அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். இட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாலும் இந்த பெயரை பயன்படுத்த மனுவில் கோரிக்கைவிடுத்துள்ளார் தினகரன்.
ஒரே கல்லில் 2 மாங்காய்
குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டால் அதே சின்னத்தில் தமிழகம் முழுக்க வாக்கு கேட்க முடியும். அதேபோல அதிமுக அம்மா என்ற பெயர் தரப்பட்டால் தாங்கள் தனிக்கட்சி துவங்கவில்லை அதிமுகவின் அங்கம்தான் என்று கூறி வாக்கு சேகரிக்க முடியும் என்பதே தினகரன் தரப்பு மூவ் என கூறப்படுகிறது.