வீரப்பனை சுட்டதற்கு நிவாரணமா தந்தது தமிழக அரசு?... ஆந்திர அமைச்சரின் சீண்டல் பேச்சு
ஹைதராபாத்: ஆந்திர என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டவர்கள் அனைவரும் கடத்தல்காரர்கள் தான் என அம்மாநில வனத்துறை அமைச்சர் கோபால கிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், ‘வீரப்பனைச் சுட்டுக் கொன்றதற்காக அவரது குடும்பத்தாருக்கு தமிழக அரசு ஏதும் நிவாரணம் தந்ததா...?' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை வெட்டியதாக கடந்த 6ம் தேதி தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். தற்காப்புக்காக அவர்களைச் சுட்டதாக ஆந்திர போலீசார் விளக்கம் அளித்த போதும், இது ஏற்கனவே திட்டமிட்ட படுகொலை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், ஆந்திரா என்கவுண்டரில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண நிதியுதவி அளித்துள்ளது. அது தவிர அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் நிதியுதவி வழங்கியுள்ளன. இதேபோல், சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பத்திற்கு ஆந்திர அரசும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபால கிருஷ்ண ரெட்டி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், ‘கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் கடத்தல்காரர்கள். மரம் வெட்டுபவர்கள் அல்ல. கொல்லப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது. சந்தன மரக்கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றதற்கு தமிழக அரசு நிவாரணம் கொடுத்ததா? ஆந்திர வன வளங்களை கொள்ளையடிக்க வேண்டாம் என தமிழக அரசை அறிவுறுத்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.