டோக்லாம் எல்லையில் படைகளை குறைத்தது இந்தியா.. சீன ராணுவம் தொடர்ந்து குவிப்பு
டெல்லி: டோக்லாம் எல்லையில் இந்தியா தனது படைகளை குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் சீனா தனது படைகளை குறைக்கப்போவதில்லை என கூறியுள்ளது.
ஒரு மாதத்திற்கும் மேலாக எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் ராணுவத்தை அதிக அளவுக்கு குவித்ததால் பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தை குறைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதையடுத்து டோக்லாம் எல்லையில் இந்திய துருப்புகளை குறைத்துக்கொள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்து இன்று அறிவிப்பு வெளியிட்டது. இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், இந்தியாவும், சீனாவும் ராஜாங்க ரீதியிலான தகவல்தொடர்புகளை மேற்கொண்டு வந்தன.
இந்த பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகளும் தங்கள் பிரச்சினைகளையும், தேவைகளையும் எடுத்து கூரின. இதன் அடிப்படையில், டோக்லாம் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களை குறைத்துககொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது என கூறியிருந்தது. சீனாவும் துருப்புகளை குறைக்கப்போவதாகவே முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், சீனாவோ தங்கள் நாட்டு ராணுவத்தை குறைக்கவில்லை என கூறியுள்ளது.
எல்லையில் ரோந்து பணியில் ஈடுபடப்போவதாகவும், இந்திய தரப்பு ஏற்கனவே படைகளை குறைத்துக்கொண்டுள்ளதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.