போதையில் வாகனம் ஓட்டும் ‘குடிமகன்’களுக்கு ரூ.10000 அபராதம்: புதிய சட்டம்
டெல்லி: மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமம் என்று டெல்லி நீதிமன்றம் சமீபத்தில் கருத்து தெரிவித்தது. இந்த நிலையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராத தொகையை 5 மடங்கு அதிகரிக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
புதிய சட்டத்தின்படி, குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் முதல் முறையே ரூ.10,000 அபராதம் தண்டம் கட்டவேண்டும். ஓராண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தாலும் அபராதம் விதிக்கப்படும்.
சாலை விபத்துக்கள்
இந்தியாவில் ஆண்டு தோறும் சாலை விபத்துக்களால் ஆயிரக்கணக்கானோர் உயிர் இழக்கிறார்கள். போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால்தான் அதிகமான விபத்துகள் ஏற்படுகிறது.
குறைந்தபட்ட அபராதம்
தற்போது, குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் முதல் முறை ரூ.2000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இதனால் குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுவதால் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக, சட்டங்களை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டுவர, சாலை போக்குவரத்து அமைச்சகம், இது தொடர்பாக கருத்து கூறுமாறு மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
ரூ.10000 அபராதம்
இந்த புதிய சட்டப்படி முதல் தடவையாக குடித்து விட்டு வாகனம் ஓட்டினால், அவர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டியது உறுதி செய்யப்பட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
புதுப்பிக்காத உரிமம்
இதேபோல காப்பீடு செய்யப்படாத வாகனங்களுக்கான அபராதத் தொகையும் பல மடங்கு அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்காமல் வாகனம் ஓட்டினாலும் அபராதம் விதிக்கப்படும். அதன்படி ஒவ்வொரு வாகனத்துக்கும் ஏற்ப ரூ.2,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
காப்பீடு செய்யாத வாகனங்கள்
இந்தியா முழுவதும் 70 சதவீத இருசக்கர வாகனங்கள் காப்பீடு செய்யப்படாமலும், புதுப்பிக்கப்படாமலும் சாலையில் ஓட்டுவது கண்டறியப்பட்டுள்ளது. அபராதத் தொகையை அதிகப்படுத்துவதன் மூலம் வாகன ஓட்டிகள் முறைப்படி காப்பீடு செய்ய முன்வருவார்கள் என அரசு எதிர்பார்க்கிறது.
ரூ.5 லட்சம்
இந்நிலையில், வாகனங்கள் தயாரிப்பில் குறைபாடு ஏற்பட்டால் அந்த குறைபாடு கண்டறியப்பட்டு உறுதிப் படுத்தப்பட்டால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அபராத தொகை செலுத்த மறுத்தால் 3 மாதம் சிறை அல்லது வாகனத்தின் மொத்த மதிப்பும் அபராதத் தொகையாக விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
புதிய முறை அபராதம்
இந்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்த பின்னர் புதிய முறைப்படி அபராதம் விதிக்கப்படும். பொதுவாக வாகன போக்குவரத்து விதி மீறல்களுக்கு முதல் தடவை என்றால் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
மாநில அரசுகளின் கருத்து
இந்த புதிய மசோதா மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநில அரசுகளுக்கும் புதிய விதிமுறைகள் பற்றி கருத்து தெரிவிக்குமாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மழைக்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட்டு அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.