பொதுஇடத்தில் ரம்ஜான் தொழுகைக்கு தடை... கார்கோன் வன்முறையால் மத்திய பிரதேச பாஜக அரசு உத்தரவு
போபால்: மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் ஏற்பட்ட வன்முறை காரணமாக ரம்ஜானையொட்டி நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் வீட்டில் இருந்து மட்டுமே ரம்ஜான் தொழுகை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த மாதம் ராமநவமி மற்றும் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின்போது ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்தின்போது மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருதரப்பு மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன.
பாஜக ஆட்சியில் குறைந்த வன்முறை! பிரதமர் மோடியை பாராட்டி ஓய்வு நீதிபதிகள் உள்பட 197 பேர் கடிதம்!
மத்திய பிரதேச வன்முறை
இது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் ஏப்ரல் 10ம் தேதி நடந்த ராம நவமி ஊர்வலத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. இதில் 24 பேர் காயமடைந்தனர். ஒருவர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்பி சித்தார்த்த சவுத்ரி மீது துப்பாக்கியால் சுடப்பட்டது. இதில் அவர் காயமடைந்தார். கார்கோன் முழுவதும் 64 வகுப்புவாத வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனந்த் நகர்-கபாஸ் மண்டி பகுதியில் இப்ரிஸ் கான் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவரும் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
முன்னெச்சரிக்கைக்கு உத்தரவு
இந்த வன்முறையை தொடர்ந்து தான் ரம்ஜான், அட்சய திருதியை கொண்டாட்டங்களை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டது. மேலும் ஒவ்வொரு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், கலெக்டர், எஸ்பி ஆகியோர் கண்காணிப்பு பணியை தீவிரமாக்க வேண்டும் என மத்திய பிரதேசத்தை ஆட்சி செய்யும் பாஜக அரசின் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.
ரம்ஜானையொட்டி ஊரடங்கு
அதன்படி ரம்ஜான் பண்டிகையையொட்டி கார்கோனில் 2 நாட்கள் ஊரடங்கு அமலாக உள்ளது. ரம்ஜான் பண்டிகை நாளை அல்லது நாளை மறுநாள் கொண்டாடப்பட வாய்ப்புள்ள நிலையி் தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், ‛‛மே 2 மற்றும் மே 3 ஆகிய தேதிகளில் கார்கோனில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரம்ஜான் தொழுமை வீட்டிலேயே மேற்கொள்ள வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கார்கோனில் பொது இடங்களில் தொழுகை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் கூறுவது என்ன
கார்கோனில் ஏப்ரல் 10ல் ராமநவமி ஜெயந்தியில் வன்முறை வெடித்த பிறகு மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி அம்பேத்கர் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி மற்றும் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தற்போது ரம்ஜான் பண்டிகையையொட்டி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.