டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் சிக்கல்களை நீக்க, சந்திரபாபு தலைமையிலான குழு ஆலோசனை
மின்னணு பணப் பரிமாற்ற குழு மும்பையில் இன்று கூடுகிறது. இக்கூட்டத்தில் மின்னணு பரிமாற்றத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
அமராவதி: மின்னணு பணப் பரிமாற்ற நடவடிக்கையை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழு மும்பையில் இன்று கூடி ஆலோசிக்க உள்ளது. மின்னணு பொருளாதாரத்துக்கு மாற வேண்டியது தவிர்க்க முடியாதது' என்று குழுவின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஆந்திர மாநிலம், அமராவதியில் அந்த மாநில முதலமைச்சரும் குழுவின் தலைவருமான சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: கடந்த நவம்பர் 8 தேதி நள்ளிரவு அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களான 500,1000 செல்லாது என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினால் மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும், இதற்கு உரிய தீர்வு காணும் வகையில் இந்தக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்படும். குறிப்பாக ரொக்கப் பரிவர்த்தனைக்கு மாற்றாக மின்னணு பணப் பரிவர்த்தனை முறைக்கு மாற வேண்டியது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிப்பதற்கு மின்னணு முறை பணப் பரிவர்த்தனை சிறந்த தீர்வாக அமையும் என்று நம்புகின்றோம்.
இதனை செயல்படுத்த நாடு முழுவதும் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒருவருக்காவது மின்னணு பணப் பரிவர்த்தனை குறித்து கற்பிக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.
அப்போது, மின்னணு முறை பணப் பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த சந்திரபாபு நாயுடு, "மாற்றம் தவிர்க்க முடியாதது என்று கூறினார்.
மேலும், ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு இருப்பதால், சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். எனவே, நமது தேசம் மின்னணு பொருளாதாரத்துக்கு மாற வேண்டியது தவிர்க்க முடியாதது' என்று சந்திரபாபு நாயுடு உறுதிபட கூறினார்.