எதிரி சொத்து திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
நீண்ட காலம் நிலுவையில் இருந்த எதிரி சொத்து மசோதா லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.
டெல்லி: 49 ஆண்டுகால பழைமையான எதிரி சொத்து சட்டத்தில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு லோக்சபாவில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் பிரிவினை மற்றும் 1962-ஆம் ஆண்டு சீன போரின்போது இந்தியாவிலிருந்து வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தவர்கள் இந்தியாவில் விட்டுச் சென்ற சொத்துகளுக்கு அவர்களது வாரிசுகள் உரிமை கோர முடியாது.
இந்திய சுதந்திரத்துக்கு பிறகு 1962 இல் நடைபெற்ற போருக்கு பின்னர் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்கள் இந்தியாவில் விட்டுச் சென்ற சொத்துகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் 1968-இல் எதிரி சொத்து சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்நிலையில் போரின்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்கள் இந்தியாவில் விட்டு சென்ற சொத்துகளுக்கு அவர்களது வாரிசுகள் உரிமை கோர முடியாத வகையில் 49 ஆண்டு பழமையான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர கடந்த ஆண்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மசோதாவானது லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையி அந்த மசோதாவை தாக்கல் செய்தபோது அதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று ராஜ்ய சபா தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டது.
அந்த திருத்தங்களை மேற்கொள்ள லோக்சபாவின் அனுமதி பெறுவது கட்டாயம். எனவே உரிய திருத்தங்களுடன் அந்த மசோதாவானது லோக்சபாவில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் இந்தியாவில் தங்கள் மூதாதையர்கள் விட்டுச் சென்ற சொத்துகளுக்கு பாகிஸ்தான், சீனா நாட்டில் வாழும் அவர்களது வாரிசுகள் உரிமை கோர முடியாது. அதுபோன்ற சொத்துகள் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம். டெல்லி ஆகிய மாநிலங்கள் ஏராளமாக உள்ளன.