பாலியல் பலாத்கார வழக்கு: காஷ்மீர் முன்னாள் அமைச்சருக்கு பிடிவாரண்ட்
ஸ்ரீநகர்: பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பதவி விலகிய ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் சபீர் அகமது கான். இவர், பெண் டாக்டரை அலுவலக விஷயமாக தலைமை செயலகத்திற்கு வரச்செய்து மானபங்கம் செய்ததாக புகார் கூறப்பட்டது.
இச்சம்பவம் காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன், சபீர் அகமது கானை பதவி நீக்கம் செய்வதுடன் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து சபீர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், சபீர் மீதான பாலியல் வழக்கை விசாரித்த ஸ்ரீநகர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, சபீரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதனால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம்.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் சபீர் பதவி விலகியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.