காதல் சின்னத்தை நேரில் பார்க்க இனி கூடுதல் கட்டணம்!
ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மகாலைச் சுற்றிப் பார்ப்பதற்கான நுழைவுக் கட்டணம் இன்று முதல் அதிகரித்துள்ளது.
காதல் சின்னமாகப் போற்றப்படும் உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால். டெல்லிக்கு அருகே ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் இது அமைந்துள்ளது.
ஷாஜகான், தன் காதல் மனைவி மும்தாஜின் மறைவிற்குப் பின் அவரது நினைவாகக் கட்டியது தாஜ்மகால். வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட தாஜ்மகாலின் அழகைக் காண உலகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆக்ரா வந்து செல்கின்றன.
தாஜ்மகாலைச் சுற்றி பார்ப்பதற்கு இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறை கட்டணம் வசூலித்து வருகிறது. இந்தக் கட்டணமானது இன்று முதல் அதிகரித்துள்ளது.
அதன்படி, தாஜ்மகாலுக்கு வரும் இந்தியர்கள் நுழைவுக் கட்டணமாக ரூ.40 செலுத்த வேண்டும். இது முன்னதாக ரூ.20 ஆக இருந்தது. அதே போல, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுழைவுக் கட்டணமாக ரூ.1000ம் செலுத்த வேண்டும். இந்த தொகை முன்னதாக ரூ.750 ஆக இருந்தது.
முன்னதாக இந்த தொகை ரூ.50 ஆகவும், ரூ.1,250 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், சுற்றுலாத் துறையினரும், சுற்றுலா ஏஜெண்டுகளும் கடுமையாக எதிர்த்த காரணத்தால் ரூ.40 மற்றும் ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.