மகளிர் தினத்தை முன்னிட்டு ரூ. 2.50க்கு மக்கும் சானிட்டரி நாப்கின்கள் அறிமுகம்.. சபாஷ் மத்திய அரசு!
டெல்லி: மகளிர் தினத்தை முன்னிட்டு ரூ.2.50 விலையில் மக்கும் தன்மைக்கொண்ட சானிட்டரி நாப்கின்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லியில் மகளிர் தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற விழாவில் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார், 'சுவிதா' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

வரும் மே மாதம் 28ம் தேதி முதல் மத்திய அரசின் பிரதான் மந்திரி பாரதிய ஜனசுததி பரிஜயானா மையங்களில் அந்த நாப்கின்கள் கிடைக்கும். சந்தையில் உள்ள மற்ற கம்பெனிகள் நான்கு நாப்கின்கள் கொண்ட பாக்கெட்டை ரூ.32க்கு விற்கும் நிலையில், மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மக்கும் நாப்கின்களை உள்ளடக்கிய ஒரு பேக்கின் விலை ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-16 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட தேசிய குடும்ப நலம் குறித்த கணக்கெடுப்பில், 15 முதல் 24 வரையிலான வயதுடையவர்களில் 58 சதவீதம் பெண்கள் தாங்களே துணி கொண்டு தயாரிக்கும் நாப்கின்கள், உறிபஞ்சுகள் போன்றவற்றையே பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்விளைவுகள் பற்றி யோசிக்காமல் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை இதுபோன்ற தரம் குறைவான நாப்கின்கள் மூலம் கெடுத்துக் கொள்கின்றனர். இதனால் பெண்களுக்கான ஆரோக்கியமான நாப்கினை தயாரித்து குறைந்த விலையில் சந்தைக்கு கொண்டு வந்த பெருமைக்குரியவர் தமிழகத்தை சேர்ந்த அருணாசலம் முருகானந்தம். இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு அக்ஷய்குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்து பேட்மேன் என்ற இந்தி படம் வெளியானது.
இப்படத்திற்கான விளம்பரமாக பேட்மேன் சாலஞ்ச் என்ற பெயரில் ஆண்களும் கைகளில் சானிட்டரி நாப்கின்களுடன் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். இதனால் மாதவிடாய் என்பது மறைக்கத்தக்க, அருவருக்கத்தக்க விசயமல்ல, அது பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விசயம் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசும் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களை அறிமுகப்படுத்தியுள்ளது பாராட்டிற்குரியது ஆகும்.












Click it and Unblock the Notifications