எதிர்ப்பு காரணமாக பல்டியடித்த மத்திய அரசு.. 857 ஆபாச இணையதளங்களுக்கு கிரீன் சிக்னல்!
டெல்லி: விமர்சகர்கள் எதிர்ப்பு காரணமாக, இறங்கி வந்துள்ள மத்திய அரசு, தடை செய்த ஆபாச இணையதளங்களை மீண்டும் செயல்பட பச்சைக்கொடி காண்பித்துள்ளது. அதேநேரம், குழந்தைகளின் ஆபாச படங்கள் இருந்தால் மட்டும் அந்த வெப்சைட்டுகளை முடக்குமாறு இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆபாச வெப்சைட்டுகள் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது.
இந்நிலையில், ஆபாச வெப்சைட்டுகளை முடக்க உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை இன்னும் நடந்துவருகிறது.
நான்கு சுவர்
இந்த மனு மீது சமீபத்தில் நடந்த விசாரணையின்போது, "நான்கு சுவற்றுக்குள் ஒரு தனிநபர் ஆபாச வெப்சைட்டுகளை பார்ப்பதை, சுப்ரீம் கோர்ட் தடுக்க முடியாது. இது எனது அடிப்படை சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று அந்த நபர் கோர்ட்டில் முறையிட்டால் என்ன செய்வது" என்று தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு வேண்டுமானால் எடுக்கலாம் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.
மத்திய அரசு தலையீடு
இருப்பினும், கோர்ட்டில் வழக்கு நிலுவையிலுள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், திடீரென ஆபாச வெப்சைட்டுகளை தடை செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. பிரபலமாக உள்ள சுமார் 857 ஆபாச இணையதளங்களை முடக்க இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு கடந்த சனிக்கிழமை தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டது.
இணையதள நிறுவனங்கள்
தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 79ன் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. வோடபோன், எம்டிஎன்எல், ஆக்ட், ஹாத்வே மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இணையதள சேவை வழங்கு நிறுவனங்கள், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 857 ஆபாச வெப்சைட்டுகளையும் தடை செய்துவிட்டன.
விமர்சனங்கள்
இதனிடையே, ஆபாச வெப்சைட்டுகளை முடக்குவது தனி நபர் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என விமர்சனங்கள் எழுந்தன. முன்னாள் அமைச்சர்கள் சிலரும், இயக்குநர் ராமகோபால் வர்மா போன்றோரும், இது தாலிபான் மயமாக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டினர். இணையதள சுதந்திரத்தை மத்திய அரசு முடக்க முயலுவதாக இந்த பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.
நமக்கேன் வம்பு
இதையெல்லாம் கவனித்த மத்திய அரசு, நமக்கேன் வம்பு என்ற ரீதியில் ஒதுங்கிக்கொண்டுள்ளது. 857 வெப்சைட்டுகளின் முடக்கத்தையும் நீக்குமாறு, இணையதள சேவை நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுவிட்டது.
இரு நிபந்தனைகள்
தகவல் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறியது: இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் இணையதளங்கள் மற்றும் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் இணையதளங்களை மட்டும் முடக்குமாறும், ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த 857 வெப்சைட்டுகளை செயல்பட அனுமதிக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல்கள் தெரிவித்தன.
ஆலோசனை நடத்திய அமைச்சர்
இதனிடையே தகவல் ஒளிபரப்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நேற்று உயர்மட்ட கமிட்டி கூட்டத்தை கூட்டி இதுபற்றி ஆலோசனை நடத்தியுள்ளார். அதன்பிறகே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அடுத்ததாக என்ன உத்தரவை பிறப்பிக்கிறதோ அதை பொருத்து அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. எனவே இந்த தடை நீக்கம் தற்காலிகமானதுதான். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பொறுத்தே தடை நீக்கம் தொடருமா, அல்லது தடை அமலுக்கு வருமா என்பது தெரியும்.