"தாய் மாதிரி".. பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்தாலே எல்லா பிரச்சனையும் சரியாகிடும்! குஜராத் நீதிமன்றம்
காந்திநகர்: "பசு நமது தாய் போன்றது; பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினாலே உலகில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்" என்று குஜராத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பசு கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் போது, இத்தகைய கருத்துகளை நீதிபதி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குஜராத் நீதிமன்றத்தின் இந்தக் கருத்தானது நாடு முழுவதும் பல்வேறு விமர்சனங்களுக்கும், விவாதத்திற்கும் வித்திட்டுள்ளது.
'பசு மாடு' அரசியல்
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலாகவே இறைச்சிக்காக மாடுகளை கொல்லக்கூடாது என்ற வாதங்கள் வலுவடைந்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மாடுகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடங்களுக்கு அழைத்து செல்வோரை 'பசு கடத்தல்காரர்கள்' எனக் கூறி தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
பசு கடத்தலுக்கு ஆயுள் தண்டனை
இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் இருந்து 16 பசு மாடுகளை கடத்தி வந்ததாக கூறி முகமது அமீன் என்பவரை குஜராத் போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு, டாப்பி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி வினோத் சந்திரா வியாஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், குற்றம்சாட்டப்பட் முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தனது உத்தரவில் நீதிபதிகள் பல கருத்துகளை தெரிவித்திருந்தார்.
"பசுவின் ரத்தம் பூமியில் விழக்கூடாது"
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த உலகத்திற்கே பசு முக்கியமானது. பசுவின் ரத்தம் பூமியில் சிந்தக்கூடாது. அவ்வாறு பசுவின் ரத்தம் பூமியில் என்றைக்கு சிந்தாமல் இருக்கிறதோ, அன்றுதான் இந்த உலகம் செழிப்பாக இருக்கும். பசு நமது தாய் போன்றது. உலகில் உள்ள வேறு எந்த ஜீவராசியும் பசுவை போன்று நன்றியுணர்வு கொண்டது இல்லை. எனவே, அத்தகைய நன்றியுணர்வு கொண்ட பசுக்களுக்கு நாம் மிகவும் மதிப்பளிக்க வேண்டும்.
பசுவை துன்புறுத்தினால்..
பெரும்பாலான மக்கள் பசுவை ஒரு மதம் சார்ந்த விஷயமாகவே பார்க்கின்றனர். அது தவறு. பொருளாதார ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பசுக்கள் பலன் கொடுக்க கூடியவை ஆகும். உதாரணமாக, ஒருவர் பசுவை துன்புறுத்தினால் அவரது சொத்துகள் அனைத்தும் அழிந்துபோகும். மொத்தத்தில், இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் பசுக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இவ்வாறு தனது தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.