போலீசிடம் இருந்து 'எஸ்' ஆன 'பாஸ்' ரிட்டர்ன்... கடத்திப் போய் மிரட்டியதாக ஹர்திக் படேல் புதுகதை!
அகமதாபாத்: படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கொடு அல்லது எவருக்குமே இடஒதுக்கீடு தரக்கூடாது என்று போராட்டம் நடத்தி வரும் குஜராத்தின் ஹர்திக் படேல் திடீரென காணாமல் போயிருந்த நிலையில் இன்று தம்மை சிலர் கடத்திச் சென்றதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். முன்னதாக ஹர்திக்கை காணவில்லை என நீதிமன்றத்தில் அவரது ஆதரவாளர்கள் புகார் கொடுத்தனர். இதனால் ஹர்திக்கை உடனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நாட்டின் மிகப் பெரும் வர்த்தக சமூகமாக இருப்பவர்கள் படேல்கள். குஜராத்தில் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் அல்லது யாருக்குமே இந்தியாவில் இடஒதுக்கீடு தரக் கூடாது என்ற மிகவும் அபாயகரமான முழக்கத்தை முன்வைத்து ஹர்திக் படேல் தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அகமதாபாத்தில் சில லட்சம் பேரை ஒன்று திரட்டி தன்னுடைய பலத்தை ஹர்திக் வெளிப்படுத்தியிருந்தார். அப்போது சில மணிநேரம் அவரை போலீஸ் கைது செய்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் மாநிலமே பற்றி எரிந்தது.
ஹர்திக் படேலின் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து இந்துத்துவா அமைப்புகள் அனைத்துமே ஒரே குரலில், ஜாதிய ரீதியான இடஒதுக்கீடு முறையை ஒழித்தாக வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனால் ஹர்திக் படேலை தூண்டிவிடுவதே ஆர்.எஸ்.எஸ். விஸ்வ ஹிந்து பரிஷத் போன்றவைதான் என்ற உண்மையும் வெளி உலகுக்குத் தெரியவந்தது.
இருப்பினும் தற்போது பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடஒதுக்கீடு தொடர்பான ஹர்திக் போராட்டங்கள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதில் பாரதிய ஜனதா தீவிரமாக உள்ளது. இதனால் ஹர்திக் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி மறுத்து வருகிறது குஜராத் அரசு.
ஹர்திக் படேல் தடையை மீறி பொதுக்கூட்டங்களை நடத்தினால் கைது செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறது குஜராத் அரசு. இந்த நிலையில் குஜராத்தின் பயத் தாலுகாவில் தென்பூர் என்ற கிராமத்தில் தடையை மீறி ஹர்திக் பேட்ல் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.
இந்த கூட்டம் முடிந்ததும் அவரைக் கைது செய்ய போலீசார் முயற்சித்தனர். ஆனால் அதற்குள் காரில் ஏறி ஹர்திக் படேல் தப்பி ஓடிவிட்டார். இதன் பின்னர் அவரது இருப்பிடம் எங்கே என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் திடீரென நேற்று இரவு குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஹர்திக் படேலை காணவில்லை; அவரை போலீசார் கைது செய்து வைத்துக் கொண்டு போராட்டத்தை முடிக்குமாறு நெருக்கடி கொடுக்கின்றனர் என்று அவரது ஆதரவாளர்கள் ஒரு புகார் கொடுத்தனர்.
இப்புகாரை மற்றொரு நீதிபதி விசாரிக்க இரவோடு இரவாக அவரும் உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து ஹர்திக் படேலை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
மீண்டு வந்த ஹர்திக்
இதனால் குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென ஹர்திக் படேல் தமது ஆதரவாளர்களுக்கு தொலைபேசியில் அழைத்து, நான் கடத்தப்பட்டு இப்போதுதான் விடுவிக்கப்பட்டுள்ளேன்; சுரேந்திரநகர் மாவட்டத்தின் தரங்கதாரா நகரம் அருகே நெடுஞ்சாலையில் இருக்கிறேன்.. வந்து அழைத்துச் செல்லவும் எனக் கூறியுள்ளார்.
இதன் பின்னர் அவரது ஆதரவாளர்கள் ஹர்திக் படேலை அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக ஹர்திக் படேல் தொலைபேசி மூலமாக செய்தியாளர்களுக்கு தெரிவித்த தகவல்:
ஆரவல்லி மாவட்டம் பையத் கிராமத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது சில நபர்கள் என் காரை பின் தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் என் காரை வழிமறித்து அவர்கள் காரில் ஏற்றிக் கொண்டனர்.
நேற்று இரவு முழுவதும் நான் அவர்களது காரில்தான் உட்கார வைக்கப்பட்டிருந்தேன். அவர்கள் இடஒதுக்கீடு கோரும் எங்களது போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று மிரட்டினர். இல்லையென்றால் என்னை ஒழித்துக் கட்டிவிடுவோம் என்றும் எச்சரித்தனர்.
என்னை மிரட்டியது போலீசாரா? அல்லது வேறு யாருமா என்பது எனக்குத் தெரியவில்லை. நான் தற்போது சுரேந்திரநகர் மாவட்டம் ஹல்வாத் நெடுஞ்சாலையில் நின்று பேசுகிறேன்.
இவ்வாறு ஹர்திக் கூறினார்.
இதனிடையே காந்திநகர் சரக ஐஜி ஹஸ்முக் படேல், ஹர்திக் படேலின் சரியான இருப்பிடம் தெரியவில்லை. அது தெரிந்ததும் அவரை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்வோம் என்றார்.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..