முதல்ல உ.பில ஒழுங்கா சொல்லி கொடுங்க.. அப்புறம் இங்க திணிக்கலாம்!
உத்தரப்பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியை முதன்மை மொழியாக கொண்ட மாநிலம் இந்தியில் படுதோல்வியை சந்தித்திருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் இந்தி மொழி முதன்மை மொழி பாடமாக கருதப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடர்பான விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநில பள்ளி கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் 2017ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இந்தி பாடத்தில் மட்டும் 5.23 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

20% தோல்வி
மொத்தம் 29 லட்சம் பேர் இந்தி தேர்வு எழுதியுள்ளனர். 23.5 லட்சம் பேர் வெற்றி பெற்றுள்ளனர். சுமார் 20 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

ஆங்கிலத்தில் அதிகம் வெற்றி
இதே நிலைதான் ஆங்கில பாடத்திற்கும் நடந்துள்ளது. இந்தி பாடத்தில் 81.28 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றனர் என்றால், ஆங்கிலத்தில் 81.46 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மொழி பாடத்தை காட்டிலும் ஆங்கிலத்தில் அதிகளவு மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

40 சதவீதம் மட்டுமே
கடந்த 2012ம் ஆண்டு 35 லட்சம் மாணவர்கள் இந்தி பாடத்தில் தேர்வு எழுதினர். அவர்களில் 3 லட்சம் பேர் ஃபெயிலாகிபோயினர். 40 சதவீதம் மாணவர்கள் மட்டுமே 50க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருந்தனர்.

இங்கிலிஷ் மீடியம்
2011ல் 33 லட்சம் மாணவர்கள் இந்தி தேர்வு எழுதிய நிலையில் சுமார் 4.5 லட்சம் மாணவர்கள் தோல்வியை தழுவினர் என்றார். தற்போது மாநில அரசு 1 முதல் 10ம் வகுப்பு வரை இங்கிலிஷ் மீடியத்தை அறிமுகம் செய்துள்ளது.

உருது, பஞ்சாபியில் வெற்றி
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஆசிரியர்கள், தாய்மொழி பாடத்திலும் மாணவர்கள் வெற்றி பெற வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்தியை தவிர பிற மொழிகளான உருது, பஞ்சாபி, வங்காளம் ஆகிய மொழிப்பாடங்களில் சுமார் 87 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இந்தி திணிப்பு
இந்தியை முதன்மை மொழியாக கொண்டுள்ள உத்தரப்பிரதேசத்தில் அதிகளவு மாணவர்கள் இந்தியில் தோல்வியடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் மக்கள் தமிழகத்தில் இந்தியை திணிப்பதற்கு பதிலாக உத்தரப்பிரதேசத்தில் இந்தியில் மாணவர்கள் பாசாக வழியை காட்டுங்கள் என தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications