சபாஷ் ஷ்ரேயாஸ்.. சீறி அடங்கிய சுப்மன் கில்.. மிரட்டிய கைல் ஜேமிசன்.. சொதப்பிய ரஹானே!
கான்பூர்: இந்தியா-நியூசிலாந்து இடையேயான கான்பூர் டெஸ்டின் முதல் நாளில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா அரை சதம் விளாசினர். ரஹானே வழக்கம்போல ஏமாற்றி விட்டார். நியூசிலாந்து பந்து வீச்சில், ஜேமிசன் இந்தியாவுக்கு அச்சமூட்டினார்.
காயத்தில் இருந்து மீண்டு திரும்பிய ஷுப்மான் கில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் களமிறங்கி ஆரம்ப தயக்கத்திற்கு பிறகு தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் நான்காவது அரைசதத்தை இன்று அவர் அடித்தார். தனது முதல் சதத்தை நோக்கிச் செல்லும் பாதையில், ஜேமிசனின் அழகான இன்ஸ்விங்கிங் பந்து அவரது ஸ்டம்பைப் பிடுங்கி எறிந்து விட்டது.
மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை - பெருக்கெடுத்த வெள்ளம்
சுழலை சிறப்பாக எதிர்கொண்டார்
காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக விளையாட முடியாத கில், நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் கண்டாலும் 52 ரன்கள் எடுத்தார்.
வெளியேறுவதற்கு முன், அவர் மைதானத்தின் ஒரு பகுதி விடாமல் எல்லா பக்கமும் அசத்தலான ஷாட்டுகள் மூலம் பந்துகளை விரட்டினார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்பப்படும் கிரீன் பார்க் ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை பேக்ஃபுட் சென்று அட்டாக் செய்தார் சுப்மன் கில்.
6 முறை அவுட்டான விதம் இதுதான்
ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து நல்ல நிலையில் சென்றபோது மீண்டும் அவரது பழைய பலவீனம் இன்றும் வெளிப்பட்டு விட்டது. ஷுப்மான் கில் தனது 14 ஆட்டங்களில் 6 முறை எல்பிடபிள்யூ அல்லது பவுல்ட் ஆகி ஆட்டமிழந்தார். இது ஒரு தொடக்க வீரருக்கு உரித்தான வலுவான தடுப்பு பேட்டிங் அவரிடம் இல்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஜேமிசன் அபாரம்
மதிய உணவுக்குப் பிறகு முதல் ஓவரிலேயே ஜேமிசனின் பந்துகள் நன்கு ஸ்விங் ஆகத் தொடங்கின. முதல் ஐந்து பந்துகளில் கில்லை செட்டிலாக விடாமல் தொந்தரவு செய்த அவர், இறுதியாக ஆறாவது பந்தில் விக்கெட்டை வீழ்த்தினார். 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட ஜேமிசன், ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே குட் லெந்தில் ஒரு பந்தை வீசினார். அது இன் ஸ்விங் ஆகி வந்தது. பந்தை தடுக்க ஷுப்மான் சரியான ஃபுட்ஒர்க் செய்யவில்லை. இதனால், பேட் மற்றும் பேட் இடையே நீண்ட இடைவெளி ஏற்பட்டு, மட்டையின் வெளிப்புற விளிம்பில் பந்து பட்டு அங்கிருந்து ஸ்டம்பை தாக்கியது.
கைல் ஜேமிசன் எப்போதுமே இப்படித்தான்
முதல் டெஸ்டின் முதல் நாளில் கைல் ஜேமிசன் தான் அச்சுறுத்தலாக இருந்தார். இந்தியாவின் டாப் ஆர்டரை பெவிலியனுக்கு அனுப்பினார். தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால்-சுப்மான் கில் மற்றும் நான்காவது இடத்தில் வந்த கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் இவரது பந்து வீச்சில்தான் அவுட்டாகினர். மயங்க் மட்டும் கேட்ச் கொடுத்தார். மற்ற இருவரும் கிளீன் பவுல்டு ஆனார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கைல் ஜேமிசன் உருவெடுத்துள்ளார். ஜூன் மாதம் நடந்த அந்த டெஸ்ட் போட்டியில், ஜேமிசன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பேட்டிங் வரிசையை தகர்த்தார். நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது நினைவிருக்கலாம்.
Recommended Video
ரஹானே
இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணத்தின்போது அஜிங்கிய ரஹானே 7 இன்னிங்ஸ்களில் 109 ரன்கள் மட்டுமே எடுத்தார். 15 ரன்கள் தான் அவரது அவரேஜ்ஜாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர் ஆகியோர் கூட, அந்த தொடரில், ரஹானேவை விட அதிகமாக ரன் எடுத்தார்கள். முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை என்பதால் ரஹானே கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஆனால், இன்றும் அவர் பெரிய ரன்களை எட்டவில்லை. 63 பந்துகளில் 35 ரன்கள்தான் எடுத்தார். ஜேமிசன் பந்தில் பௌல்ட் ஆகி வெளியேறினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சுற்றுப் பயணத்தின்போது இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டுமானால் ரஹானே இந்த தொடரில் சிறப்பாக ஆடியாக வேண்டிய நிலையில் உள்ளார். ஒருவேளை இரண்டாவது இன்னிங்சிலும் சொதப்பினால், ரஹானேவின் டெஸ்ட் கிரிக்கெட் கனவு இந்த போட்டியோடு கலைய வாய்ப்பு உள்ளது என்கிறது பிசிசிஐ வட்டாரம். மாலை 4 மணி நிலவரப்படி, இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 258 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்ரேயாஷ் ஐயர் 75 ரன்கள், ஜடேஜா 50 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 18 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிராக ஒரு இந்திய வீரர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானது ஷ்ரேயாஸ் ஐயர்தான். முன்னதாக 2003ம் ஆண்டு யுவராஜ் சிங்குக்கு பிறகு தற்போது 2021ல் ஷ்ரேயாஸ் ஐயர்தான், நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சார்பில் முதல் முறையாக களமிறங்கியுள்ள வீரராகும். சில மாதங்களுக்கு முன்பு வரை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஷ்ரேயாஸ் ஐயர். ஐபிஎல் 2021 இன் ஆரம்ப சீசன் வரை விளையாட முடியவில்லை. எமிரேட்சில் ஐபிஎல் நடக்கும்போது களமிறங்கினார்.