இன்போசிஸ் பிபிஓவின் சி.எப்.ஓ. டிஸ்மிஸ், சி.இ.ஓ. ராஜினாமா
பெங்களூர்: இன்போசிஸ் நிறுவனம் தனது பிபிஓ பிரிவு சி.எப்.ஓ. ஆபிரகாம் மேத்யூஸை நடத்தை விதிகளை மீறியதற்காக பணிநீக்கம் செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிபிஓ பிரிவு சி.இ.ஓ. கௌதம் தாக்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் பிபிஓ பிரிவு சி.எப்.ஓ. ஆபிரகாம் மேத்யூஸ் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி செவ்வாய்க்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிபிஓ பிரிவு சி.இ.ஓ. கௌதம் தாக்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆபிரகாம் எதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று இன்போசிஸ் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால் இன்போசிஸின் பிபிஓ மையங்களில் ஒன்றில் வேலை பார்த்தவர் நிதி மோசடி செய்தது தெரிய வந்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிதி மோசடி விவகாரத்தை மேலிடத்திடன் கவனத்திற்கு ஆபிரகாம் கொண்டு வராததால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆபிரகாம் மேத்யூஸ் கடந்த 2003ம் ஆண்டு இன்போசிஸ் பிபிஓ பிரிவின் சி.எப்.ஓ.வாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பைனான்ஷியல் சர்வீசஸ் டெலிவரி பிரிவின் குளோபல் தலைவரும், மூத்த துணை தலைவருமான அனுப் உபத்யாய பிபிஓ பிரிவின் புதிய சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 21 ஆண்டுகளாக இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கார்பரேட் கணக்கு குழுவின் தலைவரான தீபக் பல்லா ஆபிரகாமுக்கு பதிலாக புதிய சி.எப்.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளார். பல்லா கடந்த 1998ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்.
2013-2014ம் ஆண்டில் இன்போசிஸ் பிபிஓ ரூ.3 ஆயிரத்து 278 கோடி வருமானம் ஈட்டியது. மேலும் ரூ.578 கோடி நிகர லாபமும் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.