ஜெ.க்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் பெங்களூரின் 6 அரசு மருத்துவமனைகள்!
பெங்களூர்: மருத்துவமனைகளுக்கு தான், கடிதம் எழுதியுள்ளது உண்மைதான் என்றாலும், ஜெயலலிதாவுக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறி பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக்குள்ளாகி கடந்த சனிக்கிழமை முதல் பெங்களூர் மத்திய சிறையிலுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. சிறைக்கு செல்லும் முன்பு அவருக்கு மருத்துவர்கள் உடல் பரிசோதனை நடத்தினர்.
மருத்துவர் குழு பரிசோதனை
இதன்பிறகு நேற்று அவரது ஆஸ்தான மருத்துவர் சாந்தாராம், சென்னையில் இருந்து பெங்களூர் சிறைச்சாலைக்கு வந்து ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் குழுவும் சோதனை நடத்தியது.
கேஸ் பிராப்ளம்
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு வாயு பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனைகள் தெரியவந்தது. கேஸ் பிரச்சினைக்கு மாத்திரைகள் அளித்து அது சரி செய்யப்பட்டுள்ளது.
முக்கிய ஆஸ்பத்திரிகளுக்கு கடிதம்
இந்நிலையில் பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி, நகரிலுள்ள முன்னணி அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். ஜெயதேவா இதய நோய் சிகிச்சை மருத்துவமனை, விக்டோரியா பொது மருத்துவமனை, பவுரிங் பொது மருத்துவமனை உட்பட 6 முக்கிய மருத்துவமனைகளுக்கு ரெட்டி இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
ரத்தம் தேவை
அந்த கடிதத்தில், விவிஐபி அவசர சிகிச்சைக்காக வந்தால் தேவைப்படும் வசதிகளுடன் கூடிய ஐசியூவை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும், 8 யூனிட் 'ஓ பாசிட்டிவ்' ரத்தம், 3 யூனிட் பிளேட்லெட் ஆகியவற்றை தயாராக வைத்திருக்கும்படியும் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார். ஜெயலலிதாவின் ரத்த வகை ஓ பாசிட்டிவை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதய பாதிப்பு என வதந்தி
இந்த தகவல் நேற்றிரவு வெளியானதும், ஜெயலலிதா சிறைச்சாலையில் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், அவருக்கு இதய நோய் ஏற்பட்டுவிட்டதாகவும் பலவாறாக பேசப்பட்டது. ஆனால், இதற்கு ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
அட.. விஐபிகளுக்கு இது சகஜம்
இதுகுறித்து ரெட்டி கூறுகையில் "பெங்களூருக்கு இசெட் பிளஸ் பாதுகாப்பின்கீழ் உள்ள விவிஐபிகள் யார் வந்தாலுமே, நகரிலுள்ள முக்கிய மருத்துவமனைகளை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்துவது போலீசாரின் வழக்கம். ஜெயலலிதாவும் அதேபோன்ற விவிஐபி என்பதால், மருத்துவமனைக்கு வழக்கம்போல கடிதம் எழுதியுள்ளோம்.
ஏங்க இப்படி வதந்தி கிளப்புறீங்க
ஜெயலலிதா மிகவும் ஆரோக்கியமாக உள்ளார். அவருக்கு இதயத்தில் எந்த பாதிப்பும் கிடையாது. அவரது உடல் நிலை குறித்து பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.