பேய், பில்லி, சூனியம் வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைத்த ஜார்கண்ட்!
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மூடநம்பிக்கை தொடர்பான தாக்குதல் வழக்குகள விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க நேற்று முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் மாநிலம், ஜார்கண்ட். அம்மக்கள், இந்த நூற்றாண்டில்கூட, மூடநம்பிக்கைகளை விட மறுத்து, பில்லி, சூனியம் வைத்தது, பேயை விரட்டுவது என தகராறில் ஈடுபட்டு, பல்வேறு கொலைகளுக்கு காரணமாகிவருகிறார்கள்.
மந்திரவாதி என்ற சந்தேகப்படும் நபர்களையும், அவர்களின் குடும்பத்தையும், ஒட்டுமொத்தமாக அடித்துக் கொல்வதும், வீட்டோடு தீ வைத்து எரித்துக் கொல்வதும் அங்கு சகஜம்.
தண்டனை குறைவு
மூடநம்பிக்கையால் ஏற்படும் இதுபோன்ற காட்டுமிராண்டித்தன செயல்கள் இன்னும் தொடருவதற்கு, அதுபோன்ற நபர்கள் சட்டத்தின் முன்பு விரைவில் தண்டனையை பெற முடியாமல் இருப்பதே காரணம் என அரசு நினைக்கிறது.
வழக்குகள் நிலுவை
பல மாவட்ட நீதிமன்றங்களில் ஏற்கனவே கொலை, கொள்ளை தொடர்பான பல்வேறு குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், மூட நம்பிக்கை தொடர்புள்ள வழக்குகளை விசாரித்து தண்டனை பெற்றுத் தருவதற்குள் குற்றவாளிகளில் பலர் இயற்கையாகவே இறந்துவிடுகிறார்கள்.
நீதிமன்ற கோரிக்கை
எனவே சட்டம் பற்றிய அச்சமின்றி, மூடநம்பிக்கை சார்ந்த தாக்குதல்களும், கொலைகளும் ஜார்கண்டில் தாராளமாக அரங்கேறி வருகின்றன. இந்த நிலையை மாற்றி, இத்தகைய வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட்டுகள் அமைக்கப்பட வேண்டும் என மாநில அரசிடம் சமூக ஆர்வலர்கள் நீண்டகாலமாக கோரிக்கை எழுப்பிவந்தனர்.
ஐந்து விரைவு கோர்ட்டுகள்
இந்நிலையில், அந்த கோரிக்கைகளை ஏற்று, இங்குள்ள ராஞ்சி, சைபாஸா, குந்தி, பலாமாவ் மற்றும் சிம்டேகா ஆகிய ஐந்து மாவட்டங்களில் மூடநம்பிக்கை தொடர்பான தாக்குதல் வழக்குகள விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க நேற்று முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.