மக்களின் பயத்தை போக்க, மயானத்தில் ஒருநாள் இரவு முழுவதும் தங்கிய கர்நாடக அமைச்சர்!
பெலகாவி: மூட நம்பிக்கைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கர்நாடக கலால்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி, 100 பேருடன், இரவு நேரத்தில் மயானத்தில் தங்கினார்.
கர்நாடகாவில் மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருபவர்களில் கலால்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலியும் ஒருவர். பெலகாவி (பழைய பெயர், பெல்காம்) மாவட்டத்தை சேர்ந்தவர்.

பெலகாவி மாவட்டத்தில், மயானத்தில் பேய்கள் நிலவுவதாக மக்கள் அதீதமாக பயம் கொண்டு உள்ளனர். இந்த கருத்தை பொய்யாக்க மயானத்திலேயே சென்று ஒருநாள் இரவை கழிக்க முடிவு செய்தார் சதீஷ் ஜார்கிஹோலி.
இதையடுத்து ஆதரவாளர்கள் 100 பேருடன் பெலகாவி மாநகராட்சி மயானத்தில் இரவு பொழுதை கழித்தார். அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்து இரவு சாப்பாட்டையும் முடித்துள்ளார் சதீஷ் ஜார்கிஹோலி.
இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களிடம் மூட நம்பிக்கை இருக்கும்வரை சமூகத்தில் தாழ்ந்த இடத்திலுள்ளவர்கள் உயரத்திற்கு வர முடியாது. மயானம் என்பது புனிதமான பகுதி. ஆனால் பெலகாவி மக்களிடம் மயானம் குறித்த பயம்தான் அதிகம் உள்ளதை. இதை மாற்றவே நான் இம்முடிவுக்கு வந்தேன். எனது நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூ.600 கோடி. இருப்பினும் இதற்காக நான் சிறப்பு பூஜை எதையும் செய்தது கிடையாது.
இவ்வாறு சதீஷ் ஜார்கிஹோலி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications