மனைவியின் சொத்து விவரத்தை வேட்புமனுவில் காண்பிக்காத சசிதரூர்: ஐகோர்ட் நோட்டீஸ்
கொச்சி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை எதிர்த்து திருவனந்தபுரம் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் எஸ்.சுரேஷ் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மறைந்த தனது மனைவி சுனந்தா புஷ்கரின் சொத்துகள் பற்றிய விவரங்களை சசிதரூர் தனது வேட்பு மனுவில் தெரிவிக்காததால் அவரது மனுவை ஏற்றது சரியல்ல என்றும், எனவே அவர் வெற்றி பெற்றது செல்லாது என்றும், அந்த தொகுதியில் 2வது இடம் பெற்ற பாரதிய ஜனதா வேட்பாளர் ஓ.ராஜகோபால் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி பவதாசன், சசிதரூருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.