மனைவியின் விருப்பமின்றி உடலுறவு கொள்ளும் கணவன்கள் மீது பலாத்கார வழக்கு?
டெல்லி: மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் உடலுறவு கொண்டாலும், அதை பலாத்காரமாகவே கருத வேண்டும் என்று மத்திய அரசு நியமித்த பாம் ராஜ்புத் கமிட்டி சிபாரிசு செய்துள்ளது. அதேநேரம், மத்திய அரசு, இதுபோன்ற சட்டத்தை கொண்டுவர விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளது.
ராஜ்புத் கமிட்டி சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திடம் அளித்த அறிக்கையில், வெளிநபர்கள் செய்யும் பலாத்காரம் மட்டுமே தற்போது பலாத்காரம் என்று கருதப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

திருமணமான பெண்ணை அவளது விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி கணவன் உறவு கொண்டால், அதை பலாத்காரமாக கருத வேண்டும் என்று சிபாரிசு செய்தது.
இதுகுறித்து அத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், திருமண பந்தத்தி்ற்குள் நடைபெறும் அத்துமீறிய உறவும் ஏற்கத்தக்கது கிடையாது. கணவன் தனது செக்ஸ் ஆசையை தணித்துக்கொள்ள கட்டாயப்படுத்தி உறவு கொள்வது மட்டுமின்றி, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி, செக்ஸ் கருவியாக மனைவியை பயன்படுத்திக்கொள்ளும் போக்கும் உள்ளது. அதுபோன்ற நேரங்களில் அதை சீரியசாக கருத்தில்கொள்ள வேண்டியது அரசின் கடமை என்றார்.
அதேநேரம் ஏப்ரல் மாதம், நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், ராஜ்யசபாவில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி "திருமணத்திற்குள்ளான பலாத்காரம் (marital rape) என்ற வார்த்தை, சர்வதேச அளவில் புரிந்துகொள்ளப்படும் விதத்துக்கும், நமது நாட்டில் புரிந்துகொள்ளப்படும் விதத்துக்கும் வேறுபாடு கொண்டது. இந்தியாவில் இதுபோன்ற வார்த்தை பொருந்தாது.
இந்திய சமூகத்தில், திருமணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம், மதம்சார்ந்த நம்பிக்கைகள், சமூக பொருளாத நிலை, கல்வி நிலை போன்ற பல காரணங்களால், இந்தியாவுக்கு அந்த வார்த்தை பொருந்தாது" என்று கூறியிருந்தார். இந்நிலையில் மேனகா காந்தி அதற்கு மாறுபட்ட கருத்தை கூறியுள்ளார். மேனகாவுக்கு, மகளிர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications