ஜம்மு காஷ்மீரில் விரைவில் புதிய அரசு? மோடியுடன் மெகபூபா முப்தி ஆலோசனை
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி(பிடிபி)- பாஜக இணைந்து அரசு அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியை பிடிபி தலைவர் மெகபூபா முப்தி இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பு சாதகமானதாக இருந்ததாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பிடிபி- பாஜக கூட்டணி சார்பில் முதல்வர் பதவி வகித்து வந்த முப்தி முகமது சயீத் கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து அம்மாநிலத்தில் புதிய அரசு அமைப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
தற்போது ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கிறது. புதிய அரசு அமைப்பது தொடர்பாக இரு கட்சிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் எந்த ஒருமுன்னேற்றமும் ஏற்படவே இல்லை.
பிடிபியைப் பொறுத்தவரையில் ஜம்மு காஷ்மீரில் ஆயுதப் படையினருக்கு அதிகாரம் அளிக்கும் சிறப்பு சட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மத்திய பாஜக அரசு உறுதி தர வேண்டும் என்று நிபந்தனை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாஜகவும் மத்திய அரசும் ஜம்மு காஷ்மீரில் முதலில் ஆட்சி அமையட்டும் பின்னர் பார்க்கலாம் என கூறிவந்தது. இதுதான் முட்டுக்கட்டைக்கான காரணமாகும்.
இதனிடையே பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோரை பிடிபி தலைவர் மெகபூபா கடந்த வாரம் டெல்லியில் சந்தித்து பேசினார். ஆனாலும் ஒரு முடிவுக்கு இரு கட்சிகளும் வரவில்லை.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மெகபூபா முப்தி இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பு சுமார் அரை மணிநேரம் நீடித்தது. இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெகபூபா முப்தி, பிரதமருடனான சந்திப்பு சாதகமானதாக இருந்தது. பிடிபி எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் வியாழன்று நடைபெற உள்ளது. அதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு விரைவில் அமையக் கூடும் என்பதற்கான சமிக்ஞையாகவே மோடியுடனான மெகபூபா சந்திப்பு அமைந்துள்ளதாக கூறுகின்றன பாஜக வட்டாரங்கள்.