ஏப்ரல் 30ம் தேதியை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது... மோடி
திருப்பதி: தேர்தல் விதிமுறை மீறியதாக தொடரப்பட்ட வழக்கு தான், வாழ்க்கையில் தான் சந்திக்கும் முதல் வழக்கு என்றும் எனவே ஏபரல் 30ம் தேதியை தன்னால் மறக்க முடியாது என திருப்பதி கூட்டத்தில் மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக பிரதம வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி நேற்றிரவு ஆந்திரமாநிலம் திருப்பதியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அக்கூட்டத்தில் தெலுங்குசேத கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, ஜன சேனா கட்சி தலைவர் பவன்கல்யாண் ஆகியோரும் பங்கேற்றனர்.
அக்கூட்டத்தில் மோடி கூறியதாவது :-
தங்க ஆந்திராவை உருவாக்க...
குஜராத் தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு பகவான் சன்னதியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். தங்க ஆந்திராவை உருவாக்க நீங்கள் சந்திரபாபுநாயுடுவை முதல்வராக்க வேண்டும். மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி வரவேண்டும். தெலுங்கானா பிரச்சினை வந்த போது நாடாளுமன்றத்தில் வெங்கையாநாயுடு உங்களுக்கு ஆதரவாக பேசினார்.
மராட்டிய மாநிலம் பிரிக்கப் பட்டபோது...
உங்களிடம் தலைநகர் ஹைதராபாத் போய் விட்டதே என்ற வேதனை இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன் மராட்டிய மாநிலம் பிரிக்கப்பட்டபோது குஜராத்துக்கும் இதே நிலைதான் இருந்தது. சூரத் இன்று சிறந்து விளங்குவதற்கு ஆந்திர மக்கள் தான் காரணம்.
ஆதரவாக இருப்பேன்...
சீமாந்திரா மக்களின் ஆசையை நிராசையாகவிடமாட்டேன். உங்களுக்கு ஆதரவாக நான் இருப்பேன். அதை சொல்வதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். தங்க ஆந்திராவை உருவாக்குவோம். டெல்லியே அதிசயிக்கும் வகையில் சீமாந்திராவை உருவாக்கி காட்டுவோம்.
தண்ணீர் கொடுப்போம்...
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த நதிகளை இணைத்து சீமாந்திராவுக்கும் தண்ணீர் கொடுப்போம்.
முதல் வழக்கு...
நான் இங்கு திருப்பதி வந்து சேர்ந்ததும் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக எனக்கு தெரியவந்தது. என் வாழ்க்கையில் இதுவரை என் மீது எந்த வழக்கும் இல்லை. எனவே இந்த ஏப்ரல் 30-ந் தேதியை என் வாழ்நாளில் என்னால் ஒரு போதும் மறக்கவே முடியாது.
தேர்தல் விதிமுறை மீறல்...
என் மீது தேர்தல் விதிமுறைமீறல் வழக்கு போடப்பட்டு உள்ளது. நான் தவறான பாதையில் ஸ்கூட்டர் ஓட்டியது கூட கிடையாது. நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தியதும் கிடையாது.
தாமரையைக் காட்டியதற்காக வழக்கா...
கத்தி, துப்பாக்கியை காட்டி மிரட்டினால் தான் வழக்கு போடுவார்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் கட்சியின் தேர்தல் சின்னமான தாமரை சின்னத்தை காட்டினால் வழக்கு போடுவார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால் என் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது.
300 இடங்கள்...
நான் லஞ்சம் வாங்கவும் மாட்டேன். யாரையும் லஞ்சம் வாங்கவும் விடமாட்டேன். இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு 300 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை இலக்க எண்ணில் தான் இடம் கிடைக்கும். இந்த தேர்தலில் நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவிந்தா... கோவிந்தா...
திருப்பதி பொதுக் கூட்டத்தில் நரேந்திரமோடி தனது பேச்சை முடிக்கும்போது ‘கோவிந்தா கோவிந்தா' என்றார்.