நேஷனல் ஹெரால்டு வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்ற சோனியா, ராகுல் கோரிக்கை
டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சொத்தை அபகரிக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கை வேறு பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜவஹர்லால் நேரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தொடங்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. பின்னாளில் பலத்த நஷ்டத்தை சந்தித்தது. இந்த நஷ்டத்தை சரிகட்ட அப்பத்திரிகை நிர்வாகம் சுமார் 90 கோடி ரூபாய் வரை கடன்களை பெற்றிருந்தது.
இந்த கடன்களை அடைக்க முடியாமல், அப்பத்திரிகை தவித்து வந்த நிலையில், சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் சேர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பணத்திலிருந்து கட்சி விதிமுறைகளை மீறி 90 கோடி ரூபாயை அப்பத்திரிகைக்கு அளித்து கடனை அடைத்தனர்.
இதற்கு பிரதிபலனாக அப்பத்திரிகைக்கு சொந்தமான சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான சொத்துகளை இருவரும் அபகரித்துக் கொண்டனர் என்பது பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி புகார்.
இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கின் விசாரண நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா, சுமன் துபே, ஆஸ்கார் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு டெல்லி கீழ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த சம்மனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனிடையே சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மோசடி செய்ததற்கான முகாந்திரம் இல்லாததால் அவர்கள் மீது பண மோசடி வழக்கைப் பதிவு செய்ய இயலாது என அமலாக்கத்துறை முடிவு செய்தது.
சோனியா, ராகுல் மீதான இந்த வழக்கை கைவிட அமலாக்கத் துறை முடிவெடுத்ததால் அதன் இயக்குநர் பதவியிலிருந்து ராஜன் கடோச் மத்திய அரசால் தூக்கியடிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி பி.எஸ். தேஜி தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சோனியா, ராகுல் ஆகியோர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், இவ்வழக்கை நீதிபதி சுனில் கவுர்தான் நீண்டகாலம் விசாரித்து வந்தார். இதனால் அவருடைய பெஞ்சுக்கே இவ்வழக்கை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதைக் கேட்டுக் கொண்ட நீதிபதி தேஜி, இதுகுறித்து மீண்டும் விசாரிக்கலாம் என்று மட்டும் தெரிவித்தார்.