வாரணாசி குகையில் ‘சர்வானந்தா’ என்ற பெயரில் முனிவராக வாழ்ந்தாரா நேதாஜி?
டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1952-ம் ஆண்டில் வாரணாசி குகையில் சர்தானந்தா முனிவராக வாழ்ந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நேதாஜி விமான விபத்தில் இறந்ததாக கூறப்பட்டு வந்த தகவலை சமீபத்தில் மேற்கு வங்க அரசு வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் பொய்யாக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேதாஜியைக் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், கடந்த 1952ம் ஆண்டு நேதாஜி வாரணாசி குகையில் முனிவராக வாழ்ந்ததாக ஓய்வு பெற்ற மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் மத்திய அரசுக்கு ஆதாரங்களோடு தெரிவித்துள்ளார்.
டைரிக் குறிப்புகள்...
மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஷியாமாச்சரண் பாண்டே. இவர் தனது தந்தை கிருஷ்ணகாந்த் பாண்டேவின் டைரி குறிப்புகளில் கண்டதாக சில விபரங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு சமீபத்தில் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
முனிவர் வாழ்க்கை...
அதில், நேதாஜி 1945-ம் ஆண்டு இறந்ததாக கூறப்படும் வரலாறு தவறானது என அவர் சுட்டிக் காட்டியிருந்தார். மேலும், 1952-ம் ஆண்டுவரை நேதாஜி வாரணாசியில் உள்ள ஒரு குகையில் சர்தானந்தா முனிவர் என்ற பெயரில் ரகசியமாக வாழ்ந்து வந்ததாகவும் ஷியாமாச்சரண் தெரிவித்துள்ளார்.
கடித ஆதாரங்கள்...
இதற்கு ஆதாரமாக நேதாஜிக்கும் தனது தந்தை கிருஷ்ணகாந்த்துக்கும் இடையில் நடைபெற்ற கடித தொடர்புகளையும் அவர் ஆவணப்படுத்தியுள்ளார்.
நைந்து போன உடையில்...
இது தொடர்பாக ஷியாமாச்சரண் கூறுகையில், "2-12-1951 அன்று கங்கை-மோமதி ஆற்றங்கரை பகுதியில் நைந்துப்போன உடையில் இருந்த ஒரு முனிவரை எனது தந்தை சந்தித்தார். காசிபூரில் உள்ள பஹுரி பாபா ஆசிரமத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த அந்நபர், எனது தந்தையிடம் இன்றிரவு இந்த பகுதியில் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டுள்ளார்.
ரகசிய இடம்...
உடனடியாக அவருக்கு ஒரு கம்பளியை கொடுத்த எனது தந்தை கிருஷ்ணகாந்த், நீங்கள் விரும்பும்வரை இங்கே தங்கியிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட அந்த முனிவர், நான் யார் கண்களிலும் படாமல் வசிக்கக்கூடிய ஒரு தனிஇடத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
மூங்கில் குகை...
இதையடுத்து, வாரணாசி-காசிபூர் சாலையில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காத்தி என்ற இடத்தின் அருகே மூங்கில்களினால் உருவாக்கப்பட்ட ஒரு குகைக்குள் 14-1-1952 சங்கராந்தி தினத்தன்று அந்த முனிவர் குடியேறினார். அந்த குகையில் அவர் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது, மிக பிரபலமாக விற்பனையாகிவந்த ஒரு ஆங்கில நாளிதழை அவர் அன்றாடம் விரும்பி படித்தார்.
படையெடுத்த மக்கள்...
அந்த மூங்கில் குகையில் ஒரு புதிய முனிவர் தங்கியுள்ளதை அறிந்த உள்ளூர் மக்கள் அவரது அருளைப்பெற குகையை நோக்கி வர ஆரம்பித்தனர். ஒரேயொரு நிபந்தனையின் பேரில் அவர்களில் சிலரை நேதாஜி சந்தித்துள்ளார். தேசிய விடுதலைப் படை ராணுவத்தை உருவாக்கிய நேதாஜியின் ஜாடையை ஒத்துள்ள தன்னிடம் நேதாஜி தொடர்பாக யாரும், எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்பதே அந்த நிபந்தனை.
உள்ளூர் பத்திரிகை செய்திகள்...
அந்த முனிவரைப் பற்றிய செய்தியை இரு உள்ளூர் பத்திரிகைகள் அப்போது வெளியிட்டிருந்தன. இதையடுத்து, காத்தி குகையில் இருந்து தனது இருப்பிடத்தை காலி செய்த அவர், பிப்ரவரி மாதம் 14-ம் தேதி விந்தியாச்சல மலைப்பகுதியை நோக்கி இடம் பெயர்ந்தார் " என அவர் தெரிவித்துள்ளார்.
தலைமறைவு வாழ்க்கை...
இந்தியாவுக்கு விடுதலை அளித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சர்வதேச போர்க்குற்ற உடன்படிக்கையின்படி, நேதாஜி உயிருடன் கிடைத்தால் அவரை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. இதனால், சொந்த நாட்டிலேயே முனிவர் வேடத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய நிர்ப்பந்தம் நேதாஜிக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.