மராட்டிய தேர்தல் பிரச்சாரத்தில் நிதின் கட்காரி மீது செருப்பு வீச்சு - வாலிபர் கைது
புனே: மராட்டிய மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேச சென்ற மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மீது செருப்பு வீச முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மராட்டிய மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரதேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மராட்டியத்தில் கடந்த மாதம் 12-ந் தேதியில் இருந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
பாஜகவுக்கு ஆதரவு கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மராட்டியத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி, நேற்று இரவு அவர் கோத்ரூத் பகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் மேதா குல்கார்னியை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்றார்.
அப்போது காரிலிருந்து இறங்கி மேடையை நோக்கி சென்ற நிதின் கட்காரி மீது கூட்டத்திலிருந்த வாலிபர் திடீரென செருப்பை வீச முயன்றார். அவரை அங்கிருந்த பாஜக தொண்டர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அந்த வாலிபரை கைது செய்துள்ள போலீசார், தற்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த 5ம் தேதி லத்தூர் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிதின் கட்காரி, ‘உங்களுக்கு யாராவது ஓட்டுக்காக லஞ்சம் தர முன்வந்தால் அதை வாங்கிக்கொண்டு யாருக்கு வாக்களிப்போம் என்று தீர்மானிக்கவேண்டும்' என்று பேசியதாக கூறப்படுகிறது.
எனவே, இது தொடர்பாக நிதின்கட்காரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேர்தல் ஆணையம், நாளை மாலைக்குள் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கெடு விதித்துள்ளது.