வெப்பநிலை உயர்ந்து தெற்காசியாவில் புதிய பாலைவனங்கள் உருவாக வாய்ப்பு... ஆய்வில் அதிர்ச்சி
தெற்காசிய கண்டத்தில் குறிப்பாக வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், உயிர்வாழ முடியாத அளவுக்கு வெப்ப நிலை உயர்ந்து பாலைவனங்கள் உருவாக வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
டெல்லி: தெற்காசியாவின் முக்கிய பகுதிகளான வட இந்தியா, தெற்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் சில பகுதிகள் இன்னும் 83 ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த மண்டலமாக மாறும். அப்போது புதிய பாலைவனங்கள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன என்று ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
வரும் 2100ம் ஆண்டில், வட இந்தியாவின் பெரும்பகுதி, தெற்கு பாகிஸ்தான், வங்கதேசத்தின் சில பகுதிகள் மேலும் உஷ்ணமடைய வாய்ப்புள்ளது. இதனால் வெப்ப அலைகள் வீசும் என்றும் இந்தப் பகுதியில் மனிதர்கள் வாழவே முடியாத சூழல் ஏற்படும் என்றும் 'சயன்ஸ் அட்வான்சஸ்' என்ற ஆய்விதழ் தெரிவிக்கிறது.
மேலும், அந்த ஆய்விதழில் இது தொடர்பாக வெளியான ஆய்வு முடிவில், " கங்கைநதிப் படுகையில் அடர்த்தியான மக்கள் தொகை நிரம்பிய பகுதிகள், வெப்ப நிலை உயர்வால் கடும் பாதிப்புகளை அடையும்.
மிகுதியான வெப்பம், காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். அப்போது மனித உடல் தன்னைத்தானே வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளும் சக்தியை இழக்கும். இதனால் பல்வேறு ஆபத்தான வெப்ப நோய்கள் உருவாகும்.
அறிதல் திறன் அற்ற மனிதர்கள்
இதனால் நிறையப் பேர் உயிரிழப்பர். தப்பிக்கும் மக்கள் அறிதல் திறன் உள்ளிட்ட பல்வேறு திடீர் குறைபாடுகளும் ஏற்படும். இதனால் குறைவான அறிவு வளர்ச்சி கொண்ட மனிதர்கள் அதிகமாவார்கள்.
வடமாநிலங்களில் பாலை நிலங்கள்
உலக வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அண்மையில் ஆர்டிக் பகுதியில் பனிமலை வெடிப்பு நிகழ்ந்தது. இதே போன்ற நிலை தொடருமானால் 2100ம் ஆண்டில் இந்தியாவின் வட மாநிலங்களில் பாலை நிலங்கள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன.
வெப்ப அலைகள் வீசும்
கங்கைநதிக்கரை பகுதிகள், வடகிழக்கு இந்தியா, இந்தியாவின் கிழக்குக் கடற்கரை பகுதி, சோட்டா நாக்பூர் பீடபூமி, பாகிஸ்தானின் சிந்து சமவெளிப்பகுதி ஆகியவை வெப்ப அலைகள் வீசும் பகுதிகளாக மாறும்." என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடும் வெயிலுக்கு இறப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும்
ஒடிசாவில் 1998-ம் ஆண்டு, ஆந்திராவில் 2003-ம் ஆண்டு, குஜராத்தில் 2010-ம் ஆண்டு அதிகமான வெப்ப அலை அளவு பதிவாகியுள்ளது. 2015-ல் 5-வது பயங்கர வெப்ப அலைகள் வீசி இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் 3,500 பேரைப் பலி வாங்கியுள்ளது கவனிக்கத்தக்க ஒன்று.