சல்மான் குடிபோதையில் இருந்ததற்கு போதிய ஆதாரம் இல்லை: மும்பை ஹைகோர்ட்
மும்பை: சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி மும்பை உயர் நீதிமன்றம் அவரை இந்த வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.
2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி இரவு மும்பை பந்த்ரா பகுதியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றியதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர்.
சம்பவத்தன்று சல்மான் கான் காரில் இருந்து இறங்கி அங்கிருந்து செல்லும் முன்பு போதையில் நடக்கக்கூட முடியாமல் 3 முறை கீழே விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் சாட்சி அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் சல்மானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த மே மாதம் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி ஜோஷி, சல்மானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டது என்றும், சல்மான் குடிபோதையில் கார் ஓட்டியதற்கு போதிய ஆதாரம் இல்லை என்றும், சந்தேகத்தின்பேரில் அவருக்கு தண்டனை அளிக்க முடியாது என்றும் கூறி அவரை இந்த வழக்கில் இருந்து விடுவித்து இன்று தீர்ப்பு அளித்துள்ளார்.
இந்த தீர்ப்பை சல்மானின் ஆதரவாளர்கள் வரவேற்று கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.