எங்களை சாமி பார்த்துக்கும்.. கொரோனா டெஸ்ட்டுக்கு வர முடியாது- ஒடிஷா பழங்குடிகள் திட்டவட்டம்
ராயகடா: ஒடிஷாவின் ராயகடா மாவட்டத்தில் வசிக்கும் அழிவின் விளிம்பில் உள்ள டோங்கிரியா கோண்ட் பழங்குடிகள் கொரோனா பரிசோதனைக்கு வர முடியாது; நாங்கள் வணங்கும் நியாம்கிரி ராஜா சாமி எங்களை காப்பாற்றுவார் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் ஒடிஷா அரசு அதிகாரிகள் டோங்கியா கோண்ட் பழங்குடிகளிடம் கொரோனா பரிசோதனைக்கான விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஒடிஷாவின் ராயகடா உள்ளிட்ட மாவட்டங்களில் திராவிடர் மரபின பழங்குடி இனமக்கள் மலைகளில் வாழ்கின்றனர். இவர்கள் பேசுகிற மொழி ஆதி தமிழ் கலந்த திராவிடர் மொழி.
மலைவாழ் மக்கள்
அழிவின் விளிம்பில் டோங்கிரியா கோண்ட், போண்டா உள்ளிட்ட பழங்குடிகள் உள்ளனர். சில ஆயிரம் பேர் மட்டுமே இன்னமும் வாழ்ந்து வருகின்றனர். தங்களது பூர்வ வாழிடமான மலைகளை விட்டு எந்த ஒரு காரணத்துக்காகவும் ஒருபோதும் வெளியேறமாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பவர்கள் இந்த பழங்குடிகள்.
மலைகளுக்கும் பரவிய கொரோனா
அண்மையில் போண்டா மற்றும் டோங்கிரியா கோண்ட் பழங்குடிகளில் சிலருக்கு நடத்தப்பட்ட சோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இப்பழங்குடிகள் வாழும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொரோனா பரிசோதனை நடத்த ஒடிஷா அரசு திட்டமிட்டது.
பழங்குடிகள் எதிர்ப்பு
இதற்காக பழங்குடிகள் கிராமங்களுக்கு சென்ற அதிகாரிகளுக்கு அந்த மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். நாங்கள் தெய்வமாக வணங்கும் இந்த நியாம்கிரி மலை தெய்வமே எங்களைக் காப்பாற்றும்; அரசு பரிசோதனையும் வேண்டாம்; சிகிச்சையும் வேண்டாம் என திட்டவட்டமாக கூறியுள்ளனர். போண்டா பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதி மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதி.
விழிப்புணர்வு முயற்சி
சமவெளியில் இருந்து எளிதில் சென்றடைய முடியாத உச்சிமலைகளில் வசிக்கும் இந்த பழங்குடி மக்களிடம் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள், உள்ளூர் தலைவர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். இந்த பழங்குடிகளிடையே கொரோனா பரவினால் ஒட்டுமொத்த இனக்குழுவுமே அழியும் அபாயம் உள்ளது என்பது அதிகாரிகளின் அச்சம்.