370- வது சட்டப்பிரிவில் பாஜகவின் நிலைப்பாடு என்ன? கேட்கிறது மக்கள் ஜனநாயக கட்சி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப் பிரிவு குறித்த பாரதிய ஜனதாவின் நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சி கோரியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக உள்ள மக்கள் ஜனநாயக கட்சி பிற கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது.
இந்த நிலையில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி, கூட்டணி அமைக்க வேண்டுமானால் சர்ச்சைக்குரிய அரசியல் சாசன பிரிவு 370 மற்றும் ஆயுதப்படைக்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்டவற்றில் பாஜக உத்தரவாதம் தரவேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது.
மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர்களின் ஒருவரான நயீம் அக்தர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், அனைத்து வாய்ப்புகளும் இன்னும் திறந்தே உள்ளன. மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. எங்களின் முதன்மை கொள்கைகளில் சில விஷயங்களில் உத்தரவாதம் தேவைப்படுகிறது. எந்த கட்சியாக இருந்தாலும் எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் இவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 ஐ பாதுகாப்பதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு.இதில் பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை. அதேபோல், மாநிலத்தில் ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் அளித்துள்ளதை திரும்பெறவேண்டும் என்று கட்சி முடிவு எடுத்துள்ளது. மேலும், காஷ்மீர் குறித்த தீர்மானத்துக்கு அரசியல் ரீதியான நடவடிக்கை தொடங்க வேண்டும் என்றார்.