முன் ஜாமீன் ரத்தை தொடர்ந்து தருண் தேஜ்பால் கைது
டெல்லி: பாலியல் புகாரில் சிக்கிய டெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலின் முன்ஜாமீன் மனுவை கோவா நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து அவரை அந்த மாநில குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பாலியல் பலாத்காரம் தொடர்பாக பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் தேஜ்பாலுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத பிடிவாரண்டை பிறப்பிக்க வேண்டும் என்று கோவா மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.
அதே நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தேஜ்பாலும் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தேஜ்பாலை நேற்று காலை 10 மணி வரை கைது செய்யாமல் இருக்க கோவா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
ஒத்துழைப்பு தருவார்- தேஜ்பால் வழக்கறிஞர்
இதைத் தொடர்ந்து தேஜ்பாலின் முன்ஜாமீன் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் போலீசாரின் விசாரணை முடியும் வரை கோவாவில் தருண் தேஜ்பால் தங்கியிருப்பார். அவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் தயாராக உள்ளார். பெண் பத்திரிகையாளர் தற்போது தங்கியுள்ள மும்பைக்கு தேஜ்பால் செல்லமாட்டார். இந்த வழக்கின் சாட்சிகளையோ, ஆதாரங்களையோ அவர் சிதைத்துவிட மாட்டார். போலீசாருக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிப்பார்' என்று உறுதியளித்தார்.
சாட்சியத்தை கலைப்பார்- அரசு வழக்கறிஞர்
இதற்கு கோவா அரசுத் தரப்பு வழக்குரைஞர் சரேஷ் லோட்லிகர் எதிர்ப்பு தெரிவித்தார். அவர், இந்த வழக்கில் தேஜ்பாலை போலீஸ் காவலில் எடுத்து முறையாக விசாரிக்க வேண்டியது அவசியம். பச்சோந்தி அவ்வப்போது நிறம் மாற்றிக் கொள்வதைப் போல தேஜ்பால் அவ்வப்போது தான் கூறிய வார்த்தைகளை மாற்றிக் கூறி வருகிறார்.
குற்றம் புரிந்தார் என்பதற்கு முகாந்திரம்
ஐந்து நட்சத்திர ஹோட்டல் கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோ பதிவு, தேஜ்பால் பாலியல் குற்றம் புரிந்தார் என்பதை உறுதி செய்கிறது. கோவா போலீஸார் அவரை தேடி வந்த நிலையில், நீதிமன்றத்தின் தாற்காலிக தடை உத்தரவு பெற்ற பின்னரே தேஜ்பால், கோவா போலீஸார் முன்னிலையில் ஆஜரானார்.
புகார் அளித்த பெண் பத்திரிகையாளரிடன் குடும்பத்தினரை நிர்பந்தம் செய்ய அவர் ஏற்கெனவே முயன்றுள்ளார். இதனால் வழக்கின் சாட்சிகளை அவர் நிர்பந்திக்க நேரிடும். ஆகையால், அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். இருவரின் வாதங்களைக் கேட்ட நீதிபதி அனுஜா பிரபுதேசாய், வழக்கின் உத்தரவை மாலை 4.30 மணிக்கு ஒத்திவைத்தார்.
முன் ஜாமீன் நிராகரிப்பு
அதன் பின்னர் இரவு 8 மணியளவில் நீதிபதி அனுஜா பிரபுதேசாய் 25 பக்கத் தீர்ப்பை அளித்தார். அதில், பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரிடன் வாக்குமூலம், தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் ஆகியவை தேஜ்பால் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதை உணர்த்துகின்றன. அந்தப் பெண்ணுக்கு குருவாகவும், தகப்பனார் நிலையிலும் இருக்கக்கூடிய தேஜ்பால், அப்பெண்ணின் கண்ணியத்தை சிதைத்திருப்பதுடன், தமது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி அப்பெண்ணின் நம்பிக்கையை உடைத்து, உடல் ரீதியாகவும் வன்முறை நிகழ்த்தியிருக்கிறார். ஆகையால் தேஜ்பாலின் முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.
உடனே கைது
நீதிபதியின் உத்தரவை அடுத்து தேஜ்பால் உடனடியாக கைது செய்யப்பட்டார். பின்னர், அவரை வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
கறுப்பு கொடி வீச்சு
கோவா நீதிமன்றத்தில் ஆஜரான தேஜ்பால் மீது கருப்புக் கொடியை வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.